tamilnadu

ஜூலை 22, 23 கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்றுப்பயணம்

ஜூலை 22, 23 கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்றுப்பயணம்

சென்னை, ஜூலை 20 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜூலை 22 அன்று முதலமைச்சர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார். பின்னர், கார் மூலம் திருப்பூர் மாவட்டம் சென்று பல்லடம் மற்றும் உடுமலையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். திருப்பூர் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட கோவில் வழி பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் திறந்து வைக்கிறார். வேலம்பாளையத்தில் புதிய அரசு மருத்துவமனை, பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் முதலமைச்சர், உடுமலை பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார், பேரறிஞர் அண்ணா, அம்பேத்கர் சிலைகளையும் திறந்து வைக்கிறார். ஜூலை 23 அன்று முதலமைச்சர் பொள்ளாச்சி சென்று பொள்ளாச்சி-உடுமலை சாலை நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் பரம்பிக்குளம், ஆழியாறு பாசன திட்டம் நிறைவேற காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், சுப்பிரமணியம், மகாலிங்கம் ஆகிய தலைவர்களின் உருவச் சிலைகளை திறந்து வைக்கிறார். இதையடுத்து, கோவை தனியார் ஹோட்டலில் நடைபெறும் ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் குறித்து அதிகாரிகள், பொதுமக்கள், தொழில்துறையினர், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.  சமீபத்தில், வெளியிடப்பட்ட கோவை மாஸ்டர் பிளான்-2041 குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்கிறார். இதைத் தொடர்ந்து, உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில், பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.  முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உரையாற்றுகிறார். திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய இடங்களில் முதலமைச்சர் ‘ரோடு ஷோ’ நடத்த உள்ளார்.