தஞ்சாவூரில் புதிய விரிவான மினி பேருந்து சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர், ஜுன் 16- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திங்களன்று தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய விரிவான மினி பேருந்துத் திட்டம்-2024 இன் படி, பேருந்து வசதி கிடைக்கப் பெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய மினி பேருந்து சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் கடந்த 1997 ஆம் ஆண்டு, பேருந்து வசதி பெறாத குக்கிராமங்களில் வாழும் மக்கள் பேருந்து வசதி பெறும் நோக்கில் மினி பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, மாவட்டத்திற்கு 250 மினி பேருந்து அனுமதிச்சீட்டுகள் என்ற அடிப்படையில், பேருந்துகள் இயக்கப்படாத வழித்தடத்தில் 16 கி.மீ. மற்றும் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடத்தில் 4 கி.மீ., என மொத்தம் 20 கி.மீ. என்ற அளவில் வழித்தடம் நீட்டிப்பு செய்து இயக்கப்பட்டு வந்தன. புதிய விரிவான மினிபேருந்து திட்டத்தின் படி, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட குக்கிராமங்களை நகரப் பகுதிகளுடன் இணைக்கும் விதமாக, அதிகபட்ச வழித்தட தூரத்தினை 25 கி.மீ. ஆக உயர்த்தி வழித்தட நீட்டிப்பு செய்து, அதில் பேருந்து இயங்காத வழித்தடங்களில் குறைந்தபட்சம் 65 சதவிகிதம் என இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின்படி மினி பேருந்துகள், பேருந்து நிறுத்தங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படவும், நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது மினி பேருந்து இயக்கி வருபவர்கள் புதியத் திட்டத்திற்கு மாற்றம் பெற்று இயக்கிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, எஸ்.கல்யாண சுந்தரம், ச.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம், என்.அசோக்குமார், துரை.சந்திரசேகரன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.