tamilnadu

img

25 மாநகராட்சிகள் மற்றும் 144 நகராட்சிகளின் அடிப்படை பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு

25 மாநகராட்சிகள் மற்றும் 144 நகராட்சிகளின் அடிப்படை பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு


சென்னை, ஜூலை 17 -  தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் மற்றும் 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படைப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 17) நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், முதலமைச்சர் பேசுகை யில், தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை விரைந்து நிறைவேற்றிட அறிவுறுத்தினார். குறிப்பாக மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். நகர்ப்புற உள்ளாட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், துப்புரவுப் பணி மற்றும் தெருவிளக்குகள் பராமரிப்பு பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என்றும், சட்டமன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்ட பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அப்பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் நிறைவேற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலு வலர்களுக்கு அறிவுறுத்தினார். கடந்த 4 ஆண்டுகளில் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் 15 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளான மெட்ரோ ரயில் திட்டங்கள், புதிய குடிநீர் திட்டங்கள், மழைநீர் வடிகால் பணிகள் போன்ற பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சிகளில் 3,199 பணிகளும் நகராட்சிகளில் 4,972 பணிகளும் தொடங்கப்பட உள்ளது என்று தெரிவி க்கப்பட்ட நிலையில்,  இப்பணிகள் அனைத்தையும் விரைவில் தொடங்கி வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முன்பே முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதேபோல் இறுதிக்கட்டத்தில் இருக்கும் பணிகள் மற்றும் பாதி முடிவுற்ற பணிகளை எல்லாம் போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க மின்வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், நெடுஞ்சாலைகள் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார். பருவமழைக் காலம் தொடங்கு வதற்கு முன்பே மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பாக தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ள அபாயம் இருக்கும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலில் அங்கு பணிகளை படிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என். நேரு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.