சென்னை,பிப்.14- எடப்பாடி கே.பழனிசாமி அதிகாரத்தில் அமர்ந்து பாஜக ஒன்றிய அரசின் ‘’கைவிரல் நுனியில் ஆடும் பொம்மலாட்டப் பொம்மையாக’’ ஆடிய அவலத்தை என்றும் மறக்க இயலாது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:- பத்தாண்டு கால இடைவெளிக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளையும், நிர்வாகத்தையும் தேர்வு செய்யும் ஜனநாயக கடமையை ஒவ்வொருவரும் தவறாமல் நிறைவேற்ற வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தலை பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக சுயநல ஆதாயம் தேடும் குறுகிய நோக்கத்தில் நடத்தவில்லை என்பதை நாடறியும். அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்தவர், அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்துக்காக அவருக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கியது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு கூவத்தூரில் நடந்த நாடகங்களை யாரும் மறந்திருக்க முடியாது. எடப்பாடி கே.பழனிசாமி அதிகாரத்தில் அமர்ந்து பாஜக ஒன்றிய அரசின் ‘’கைவிரல் நுனியில் ஆடும் பொம்மலாட்டப் பொம்மையாக’’ ஆடிய அவலத்தை என்றும் மறக்க இயலாது. வகுப்புவாத, மதவெறி, சாதிவெறி சக்திகளின், சுயநலக் கும்பலின் கைகளில் சிக்கி சீரழிந்து வரும் ஜனநாயகத்தை மீட்க திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உதயமானது. “இந்தியா காப்போம் தமிழகத்தை மீட்போம்’’ என்ற முழக்கத்தை முன்வைத்து தொடர் அரசியல் இயக்கங்களை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும், 2021 நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களிலும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் பேராதரவு கொடுத்து ஜனநாயக வாழ்வை மீட்டெடுத்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய தலைமையில் அமைந்த திமுக ஆட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. நகர்மயமாகி வருவதில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது. இன்றுள்ள விபரப்படி 49 விழுக்காடு மக்கள் நகர்ப் பகுதிகளில் வசித்து வருகிறார்கள். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நகரமைப்பு தொடர்பாக சரியான கொள்கையும் பார்வையும் இல்லாததால் பெரும்பகுதி மக்கள் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவுநீர் வெளியேற்றம், போக்குவரத்து இணைப்பு, இணைப்புச் சாலை, சுகாதார வசதி ஏதுமில்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். ‘அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் நல்லாட்சி நகர்ப்புற உள்ளாட்சியிலும் அமைந்திட திமுகழகத் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆதரவோடு களம் இறங்கியுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும், திமுகழக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் மற்ற தோழமை கட்சி வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னத்திலும் வாக்களித்து ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.