பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஹரியானாவில் ஆகஸ்ட் 8 முதல் ஆஷா மருத்துவ ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 20 நாட்களுக்கு மேல் தொடர்ந்து நடைபெற்ற இந்த போராட்டத்தை ஆளும் மாநில பாஜக அரசு ஆகஸ்ட் 27 அன்று கைது நடவடிக்கை மூலம் கலைத்தது. கைது செய்யப்பட்ட ஆஷா ஊழியர்கள், சிஐடியு தலைவர்களை தடுப்பு காவலில் வைத்து குடிக்க தண்ணீர், கழிவறை கூட செல்ல விடாமல் சித்ரவதை செய்துள்ளது. பாஜக அரசின் இந்த அடாவடி நடவடிக்கைக்கு அஞ்சாமல் வெகுண்டெழுந்த 20,000-க்கும் மேற்பட்ட ஆஷா ஊழியர்கள், சிஐடியு தலைவர்கள் முன்னிலையில் பிரம்மாண்ட பேரணியுடன் மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். ஆஷா ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தை முறியடிக்கவும், இயக்கத்தை நசுக்கவும் பாஜக அரசு ஒவ்வொரு யுக்தியையும் கையாள்கிறது. பாஜக அரசின் இந்த சர்வாதிகார போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியகுழு கண்டனம் தெரிவித்துள்ளது.