கழிவுநீர் கையாள்வதில் புது முயற்சி!
பன்னாட்டு நீர் சங்கத்தின் உலக நீர் பேராயம் மற்றும் கண்காட்சி இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கூடுகிறது. இது உலகளாவிய நீர் நிபுணர்களின் கூடுகை ஆகும். இதில் நகர்ப்புற நீர் சேவை, வேளாண்துறை மற்றும் தொழில் துறையை சேர்ந்த வல்லுநர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் சீனாவை சேர்ந்த ஒரு கழிவு நீர் சுத்திகரிப்பு நிறுவனம் புது முயற்சிக்கான முதல் பரிசை வென்றுள்ளது. ‘தொழில்நுணுக்க தூண்டுதல் மற்றும் சந்தை மாற்றம்: சீனாவின் கழிவு நீர் வள முன்மொழிவு ஆலை’ என்ற தலைப்பிடப்பட்ட திட்டம் இந்த பரிசை வென்றுள்ளது. இந்த பேராயம் கனடாவில் டொரண்டோ நகரில் நடைபெற்றுள்ளது. கால நிலை மாற்றம், ஆதார வள பற்றாக்குறை, நிலைத்த வாழ்வு ஆகிய சவால்களை சந்திப்பதை இலக்காக கொண்டுள்ளது இந்த நிறுவனம். யிக்சிங் நகரிலுள்ள நீர் வள மீட்பு நிலையத்தில் இது தினமும் 20000க.மீ கழிவு நீரை கையாள்கிறது. “இந்த நிலையம் உள்ளூர் மட்ட நீர் வளமை, தாது உப்பு நிறைந்த மண் மூலம் விவசாயத்தை வலுப்படுத்துவது, உலகளாவிய நிலைத்த கழிவுநீர் கையாளுதல் ஆகியவற்றிற்கு ஊக்கம் அளிக்கிறது. மேலும் புதிய முன்முயற்சிகள் எடுப்பதையும் சர்வதேச ஒத்துழைப்பையும் உற்சாகப்படுத்துகிறது” என்கிறது பன்னாட்டு நீர் குழுமம்.
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா!
மனிதர்களுக்கு வயதாகும்போது விழியிலுள்ள ‘pupil’ எனும் துவாரம் சுருங்குகிறது என்பது சோதனைச் சாலைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், அறியப்பட்ட ஒன்று. இப்போது அதை ஓர் கள ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார்கள். இந்த ஆய்வு ஜூன் 19ஆம் தேதியிட்ட ‘Royal Society Open Science’ இதழில் வெளிவந்துள்ளது.ஒவ்வொரு பத்தாண்டிற்கும் விழித்துளை 0.4 மில்லிமீட்டர் சுருங்குகிறதாம். வயதாகும்போது மங்கிய வெளிச்சத்தில் பார்ப்பது ஏன் சிரமமாக இருக்கிறது என்பதை இது விளக்குகிறது. ஒளியானது கருமையான விழித்துளை வழியாக சென்று கண்ணின் பின்பக்கத்திலுள்ள ரெடினாஎனும் விழித்திரையில் விழுகிறது. அங்குள்ள செல்கள் ஒளியை பிம்பங்களாக மாற்றுகின்றன. ஒளியின் தன்மையை பொறுத்து விழித்துளையின் விட்டம் 2 இலிருந்து 8 மில்லிமீட்டர் வரை மாறும். பிரகாசமான ஒளியின் போது சுருங்கியும் மங்கிய ஒளியில் அகன்றும் அது செயல்படுகிறது. சோதனைச் சாலையில் ஒளியின் பிரகாசம் அல்லது அலை நீளம் போன்ற தன்மைகளை மாற்றி விழித்துளையின் செயல்பாட்டை அளவிடலாம். ஆனால் எதார்த்த உலகில் இந்த செயல்பாட்டை புரிந்துகொள்ள வேண்டும். எனவே ஆய்வாளர்கள் 18இலிருந்து 87 வயது வரை உள்ளவர்களை இயற்கை ஒளி உள்ள வெளிப் பகுதிகளிலும் செயற்கை ஒளி உள்ள அறைகளிலும் கணினிகளில் வேலை செய்யும்போதும் ஒளியின் தன்மையையும் கண்களின் செயல்பாட்டையும் அளவிட்டனர். 83 நபர்களின் தரவுகளை ஆய்வு செய்தபோது 64 பங்காளர்களின் விழித்துளை அளவுகள் மாறுபட்டிருப்பது தெரிய வந்தது. இப்படிப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் வயதானவர்களுக்கு ஏற்றாற்போன்ற விழிக்கருவிகளையும் ஒளி அமைப்புகளையும் அமைக்கலாம் என்கிறார் ஆய்வின் தலைவரும் ஜெர்மனியிலுள்ள மேக்ஸ் பிளாங் கழகத்தை சேர்ந்தவருமான நரம்பியலாளர் மேனுவல் ஸ்பிட்ஷன்.
இரவையும் பகலையும் பிரிக்கும் கோடு!
புவியில் இரவு முடிந்து பகல் தொடங்கும் வேளை டெர்மினேட்டர்(Termintor) என்று அழைக்கப்படுகிறது. இதை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புகைப்படம் எடுத்து நாசா வெளியிட்டுள்ளது. தொடுவானத்தில் வளிமண்டலத்தின் நீல நிறமும் சூரியனின் தங்க ரேகைகளும் சந்திக்கும்போது இரவுக்கும் பகலுக்கும் இடையிலான எல்லைக் கோடு தெளிவாகத் தெரிகிறது. சர்வதேச விண்வெளி நிலையம் பூமியை ஒரு நாளைக்கு பதினாறு முறை சுற்றி வருகிறது. எனவே இந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு அது மிக உகந்த இடமாக உள்ளதாம். இந்த விண்வெளி நிலையம் பசிஃபிக் பெருங்கடலின் மேலே 267 மைல்கள் உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இரவையும் பகலையும் பிரிக்கும் டெர்மினேட்டர் கோடு, சூரிய உதயத்தின் போது ஒரு முறையும் சூரிய மறைவின் போது ஒரு முறையும் ஆக ஒரு நாளில் இரண்டு முறை தெரிகிறது. சம பகலிரவு நாட்களில்(equinox) இந்தக் கோடு நேர் கோடாகவும் நீண்ட பகல்/ நீண்ட இரவு நாட்களான சோல்ஸ்டிஸ்(solstice) காலங்களில் வளைந்த கோடாகவும் காட்சியளிக்கிறது. சமபகல் இரவு நாட்களில் பூமியின் அச்சு சுழற்சிக்கு செங்குத்தாகவும் சோல்ஸ்டிஸ் நாட்களில் பூமியின் அச்சு சாய்வு அதிகம் இருப்பதாலும் இந்த விளைவு ஏற்படுகிறதாம்.
தண்டுவடத்தை தானே சீர் செய்யும் சீப்ரா மீன்கள்
சீப்ரா மீன்கள் சேதமடைந்த தண்டுவடங்களை முழுவதுமாக புதிப்பித்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவை என தெரிய வந்துள்ளது. ஓர் ஆய்வில் இந்த புதுப்பித்தலில் ஈடுபடும் அனைத்து செல்களின் வரைபடமும் அவை எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த நரம்பு இழைகளின் தக்கவைப்புத் தன்மையும் மாற்றிக் கொள்ளும் திறனுமே தண்டுவட புதுப்பித்தலுக்கு முக்கியத் தேவை என்று தெரியவந்துள்ளது. புதிய நரம்பு இழைகளை உண்டாக்கும் ஸ்டெம் செல்களே புதுப்பித்தலுக்கு முக்கியம் என்று கருதப்பட்டிருந்தது. இப்போது அவை நரம்பு இழைகளின் செயல்களுக்கு துணை நிற்கின்றனவே ஒழிய அவை புதுப்பித்தலை முன்னின்று நடத்துவதில்லை என்றும் தெரிகிறது.