மதுரையில் கொரோனா வந்த அச்சத்தால் குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 4 பேரில் 3 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் கல்மேடு அருகே உள்ள எம்ஜிஆர் காலனி பகுதியை சேர்ந்த லட்சுமி கணவனை இழந்த நிலையில் தன்னுடைய மகள், மகன் மற்றும் பேரனுடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் மூத்தமகள் ஜோதிகாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று வந்துவிடும், வாழ்வாதாரம் முடங்கிவிடும் என்ற அச்சத்தில் லட்சுமி(46), கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகள் ஜோதிகா (23) மற்றும் அவரது சகோதரரான சிபிராஜ்(13), ஜோதிகாவின் மகனான ரித்தீஷ்(3) ஆகிய நான்கு பேரும் சாணிபவுடர் விஷத்தை உண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.
இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜோதிகா மற்றும் அவரது மகனான 3 வயது குழந்தை ரித்தீஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் தாய் லட்சுமி மற்றும் சகோதரர் சிபிராஜ் ஆகிய இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதனைதொடர்ந்து இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த சிலைமான் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.