“போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’’ விழிப்புணர்வுப் பேரணி
அரியலூர், ஜுன் 27- உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி அரியலூரில் மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு எனும் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. அண்ணாசிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். மாவட்ட காவல் காண்காணிப்பாளர் தீபக்சிவாச் முன்னிலை வகித்தார். பேரணியானது தேரடி, சத்திரம், மாதாகோயில் வழியாகச் சென்று ஒற்றுமை திடலில் நிறைவடைந்தது. பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி, முழக்கமிட்டுச் சென்றனர். நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலசுப்ரமணியம், கோட்டாட்சியர் கோவிந்தராஜ், வட்டாட்சியர் முத்துலட்சுமி மற்றும் காவல்துறையினர், ஆசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.