கொரோனாவால் அரசர் நிம்மதியாக இருக்கிறார்
கொரோனோ வந்துவிட்டதில்
அரசருக்கு மிக்க மகிழ்ச்சி
அவர் அந்தக் கிருமியை
தன் செல்ல நாய்க்குட்டியை முத்தமிடுவதுபோல
அத்தனை பிரியமாய் முத்தமிடுகிறார்
தேசம் இப்போது எல்லாவற்றையும் மறந்துவிட்டு
கொரோனோ பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறது
நான் என் நண்பர்களிடம் பேச
தொலைபேசியை எடுத்தால்
கொரோனோவைப்பற்றி
அரசாங்கம் என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறது
மக்கள் அரசிற்கு எதிராக
எவ்வாறு யுத்தம் செய்கிறார்கள் என்பதை அறிய
தொலைகாட்சியைத் திருப்பினால்
கொரோனாவிற்கு எதிராக யுத்தத்திற்கு
மக்கள் அழைக்கப்படுகிறார்கள்
கொரோனாவைவிடவும் பதட்டம்
வேகமாக பரவுகிறது
தேசத்தை கொரோனோவிற்கு எதிரான போர்முனைக்கு
அரசர் அவசரமாகக் கொண்டுசெல்கிறார்
உண்மையில் அவர் எப்போதும்
எல்லைகடந்த பயங்கரவாதத்தால்
தன் துயரங்களை கடந்துவிடுபவர்
இந்த முறை கடவுள் அவருக்கு
கொரொனோ என்ற எதிர்பாராத பரிசை
எல்லை கடந்து அனுப்பியிருக்கிறார்
நடுத்தெருவில் கொல்லப்பட்டவர்களைப்பற்றி
இனி பேச ஒன்றுமில்லை
குற்றத்தை ' ஹாண்ட் சானிடைஸைர்' மூலம் கழுவுங்கள்
கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணம் பற்றி
இனி பேச ஒன்றுமில்லை
'கொரோனோ மாஸ்க்'குகள்
மூன்று வாங்கினால் ஒன்று இலவசம்
இறந்துகொண்டிருக்கும் பொருளாதாரம்பற்றிப்பேச
இனி ஒன்றுமில்லை
கொரோனோ நோயாளிகளைத் தனிமைப்படுத்த
ஐய்யாயிரம் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுவிட்டன
இனி குடியுரிமைகேட்டு யாரும்
தெருவுக்கு வராதீர்கள்
கூட்டம் கூடினால் அரசு கொல்வதற்குமுன்
கொரோனாவால் கொல்லப்படுவீர்கள்
இனி அரசாங்கம் சொல்வதை மட்டும் கேளுங்கள்
யாரும் யாருடையை கண்களையும் பார்க்காதீர்கள்
யாரும் யாருடையை கைகளையும் தொடாதீர்கள்
யாரும் யாரையும் முத்தமிடாதீர்கள்
மக்களின் கவனத்தை
ஒரு குழந்தையின் கவனத்தைப்போல
திசைதிருப்புவது எளிது
அவர்களுக்கு மரண பயத்தை உண்டாக்கினால்
கொலைகாரர்களிடம் எளிதில் சரணடைவார்கள்
எல்லாவற்றையும் சந்தேக்கிக்க வேண்டுமா என
எரிச்சலடைகிறீர்கள்
சந்தேகத்திற்கு இடமின்றி
இதுவரை ஏதேனும் நடந்திருக்கிறதா?
அரசர் உண்டாக்கிய துயரங்களுக்கு மாற்றாக
மக்களுக்கு கடவுள்கள்தான்
ஒரே ஆறுதலாக இருந்தனர்
இப்போது கோயில்கள் பூட்டப்படுகின்றன
மசூதிகள் பூட்டப்படுகின்றன
சர்ச்சுகள் பூட்டப்படுகின்றன
இப்போது அரசர் மட்டுமே நம்மைக் காப்பாற்ற
எஞ்சியிருக்கும் ஒரே கடவுள்
அவர் எதை விரும்புகிறாரோ
அது எப்போதும் தன்னியல்பாக நடக்கிறது
எதிர் கட்சிகள் முரண்பாடுகளை மறந்து
அரசாங்கத்தோடு நில்லுங்கள்
மக்கள் சுயநலத்தைவிட்டு
அரசாங்கத்தோடு நில்லுங்கள்
எதுவுமே இனி முக்கியமல்ல
கொரோனோவிற்கு எதிரான
போர் மட்டுமே முக்கியம்
அரசர் புன்னகையுடன்
சூடாக ஒரு தேனீர் அருந்துகிறார்
தன் அதிகாரத்தை ஒரு கொள்ளை நோயின்மேல்
மீண்டும் ஒரு முறை நிறுவுகிறார்
கொரோனோ என்பது தேசியப் பாதுகாப்பு
கோரோனோ என்பது தேச ஒன்றுமை
கொரோனோ என்பது நல்லிணக்கம்
கொரோனோ என்பது ஊரடங்கு
கொரோனோ என்பது ஒப்புக்கொடுத்தல்
கொரோனோ என்பது
கண்ணுக்குத் தெரிந்த எதிரிக்குப்பதில்
கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிடுதல்
தனது ஆட்சியை நிர்வகிக்கும் பொறுப்பை
அரசர் தற்காலிகமாக
கொரோனோவிடம் ஒப்படைக்கிறார்
10.3.2020
மனுஷ்ய புத்திரன்