புதுதில்லி:
தில்லி ஷாகீன்பாக் போராட்டத்திற்குள், பர்தா அணிந்து ஊடுருவிய பாஜக ஆதரவு பெண் பிடிபட்டுள்ளார்.குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் அருகே உள்ள ஷாகீன் பாக் பகுதியில் இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வலதுசாரி ஆதரவாளரான குன்ஜா கபூர் என்ற பெண் பர்தா அணிந்துகொண்டு, இப்போராட்டத்திற்குள் ஊடுருவி அமைதியைக் குலைக்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சந்தேகம் எழவே, போராட்டக்களத்தில் இருந்த பெண்கள் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, அவர் குன்ஜா கபூர் என்பதும், பிரதமர் மோடியின் ஆதரவாளர் என்பதும் தெரியவந்துள்ளது.இதையடுத்து, போராட்டக்காரர்கள், அந்தப் பெண்ணை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் அவரிடம் விசாரித்ததில், ‘பர்கா’ என்ற பெயரைச் சொல்லி போராட்டக்களத்தில் நுழைந்ததை குன்ஜா ஒப்புக்கொண்டுள்ளார். ஏற்கெனவே, இந்தப் பகுதியில் இந்துத்துவா ஆதரவாளரால் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற நிலையில், தற்போது பெண் ஒருவர் ஊடுருவியிருப்பதால், இச்சம்பவங்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தவேண்டும் என இஸ்லாமிய பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.