tamilnadu

img

அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட சுதந்திர தினத்தன்று சபதம் ஏற்போம் - இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்

அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திடவும், நாட்டின் சுதந்திரத்தை வலுப்படுத்திடவும் சுதந்திர தினத்தன்று சபதம் ஏற்போம் என்று இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளன.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரத பிஸ்வாஸ் கூட்டாக மக்களுக்கு விடுத்துள்ள அறைகூவலில் கூறியிருப்பதாவது:

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று மற்றும் தேசிய அளவிலான சமூக முடக்கக் காலத்தில், ஒரே சிந்தனையுடன் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து முறியடிப்பதற்கும், அதனால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கும் பதிலாக, ஆர்எஸ்எஸ்/பாஜக மத்திய அரசாங்கம் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் கொள்கைகளைக் குழிதோண்டிப்புதைத்திட அரக்கத்தனமான முறையில் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. இத்துடன் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராகக் குறி வைத்து சமூகத்தில் இந்துத்துவா மதவெறித் தீயை விசிறிவிட்டுக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றம், நீதித்துறை, தேர்தல் ஆணையம், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), அமலாக்கத்துறை போன்ற ஒவ்வொரு அரசமைப்புச்சட்ட அதிகாரக் குழுமத்தையும் அவற்றின் சுதந்திரத்தை அரித்துவீழ்த்தும் வண்ணம் அவற்றின்மீது தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் அவற்றின் சுதந்திரமான நடவடிக்கைகளிலிருந்து அவற்றை அரித்து வீழ்த்திக் கொண்டிருக்கிறது. ஜனநாயக உரிமைகளும், சிவில் உரிமைகளும் கடும் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளன. அரசாங்கத்திற்கு எதிராகவோ அவற்றின் கொள்கைகளுக்கு எதிராகவோ எவ்விதமான கருத்துக்களைக் கூறினாலும் “தேச விரோதிகள்” என முத்திரை குத்தப்பட்டு, அவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தேசத்துரோகக் குற்றப்பிரிவு போன்ற அரக்கத்தனமான சட்டங்களின்கீழ் கைது செய்யப்படுகின்றனர். மேலும் நாட்டில், நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சமாக விளங்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் கொள்கைகளை மறுதலித்துவிட்டு, அனைத்து அதிகாரங்களையும் மற்றும் அதிகாரக்குழுமங்களையும் மத்தியத்துவப் படுத்துவதற்கான முயற்சிகளும் நடந்துகொண்டிருக்கின்றன.

இத்தகைய சூழ்நிலைமைகளில், மக்கள் ஒன்றுபட்டு நின்று நம்முடைய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திடவும், அதன்கீழ் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களைப் பாதுகாத்திடவும் அதன் மூலம் இந்திய சுதந்திரத்தை வலுப்படுத்திடவும் வேண்டியது அவசியமாகும்.   

செப்டம்பர் 1 அன்று அமெரிக்காவின் இளைய பங்காளியாக இந்தியாவை மற்றும் முயற்சியைக் கண்டித்து எதிர்ப்பு தினம்

அமெரிக்காவின் கட்டளைகளுக்கு அடிபணிந்து செல்லும் மத்திய பாஜக அரசாங்கம், இந்தியாவை அமெரிக்காவின் உலக மேலாதிக்க போர்த்தந்திர சூழ்ச்சிகளை வலுப்படுத்துவதற்காக அதன் இளைய பங்காளியாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இது நாட்டின் நலன்களுக்கோ நாட்டு மக்களின் நலன்களுக்கோ உதவிடாது. இந்தியா நீண்டகாலமாகக் கடைப்பிடித்துவந்து சுயேச்சையான அயல்துறைக் கொள்கையைப் பின்பற்றிட வேண்டும்.

இந்தியா அதன் அயல்துறைக் கொள்கையைச் சரிசெய்திட வேண்டும். அமெரிக்காவிற்கு அடிபணிந்து செல்லும் விதத்திலான அயல்துறைக் கொள்கையோ அல்லது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணியுடன் தன்னையும் பிணைத்துக்கொள்வதோ இந்தியாவின் இறையாண்மையை அரித்துவீழ்த்திடும் மற்றும் இந்தியாவின் சுயசார்புக்கொள்கையையும் மறுதலித்திடும்.

இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.