tamilnadu

img

பிரிவினையை எதிர்த்து பேனா பிடித்த எழுத்தாளர் கிருஷ்ண சந்தர் - எஸ்.ஏ.பெருமாள்

கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 21

சந்தர் தனது படைப்புகளில் சாதி, மதவெறிகளைக் கடுமையாகச் சாடினார்.இனக்கலவரங்கள், வன்முறைகள், பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டுமென்றார். மிகச்சிறந்த மனிதாபி மானியாகவும், சர்வதேசிய வாதி யாகவும் வாழ்ந்தார்

கிருஷ்ண சந்தர், உருது, இந்தி, ஆங்கில மொழிகளில் நாவல்கள், சிறுகதைகள், சினிமா, திரைக்கதைகள் என எழுதிக் குவித்தவர். இருபது நாவல்கள், முப்பது சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ரேடியோ நாடகங்களும் எழுதி ஒலிபரப்பாகின. இந்திய - பாக். பிரிவினைக்குப் பின் இந்தியில் மட்டுமே எழுதினார். இவரது எழுத்துக்கள் அனைத்தும் அங்கதச் சுவையுள்ளவையாதலால் பலரும் விரும்பி வாசித்தனர். திரைக்கதை வசனம் எழுதி தனது வறுமையைப் போக்கினார். ஒரு கழுதையின் சுயசரிதை என்ற இவரது நாவல் தமிழ், ஆங்கிலம் உட்பட பதினாறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியானது.

கிருஷ்ண சந்தரின் “அன்னதாதா” (தானிய தானம்) புகழ்பெற்றது. நிலப் பிரபுக்களுக்காக உழைத்து தானியங்களை விளைவித்த விவசாயக் கூலி அடிமைகளின் வறுமை வாழ்வு பற்றியது கதை. இது 1946ல் “தர்த்தி - கி- லால்” என்று இந்தித் திரைப்படமாக வெளியாகி வெற்றிபெற்றது. தொடர்ந்து இவரது “மம்தா (1966), “ஷராபத்” (1970) திரைப்படங்கள் வந்து புகழ்பெற்றன. தனது திரைக்கதைகளை இவர் உருதுமொழியில் தான் எழுதிக் கொடுத்தார். கிருஷ்ண சந்தர் 23-11-1914ல் ராஜஸ்தானில் பரத்பூரில் ஒரு டாக்டரின் மகனாய் பிறந்தார். ஆனால் அவர்களது பூர்வீகம் பஞ்சாப் மாநிலமாகும். பின்பு இவரது தந்தை காஷ்மீரில் பூஞ்ச்சில் மகாராஜாவின் டாக்டராய் சேர்ந்தார்.

சந்தரின் முதல் நாவலான “முறியடிப்பு” காஷ்மீரில் பிரிவினை குறித்ததாகும். புகழ்பெற்ற இவரது படைப்பான “மிட்டி கா சனம்” காஷ்மீரச் சிறுவன் ஒருவனின் கதையாகும். இது சிறுவனின் நினைவுகளாக எழுதப்பட்டது.  அடுத்து சந்தர் எழுதிய புகழ்பெற்ற நாவல் “கத்தார்” (துரோகி) இந்தியா - பாக் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டதாகும். அதற்போது மக்கள் அடைந்த அளவு கடந்த துன்பதுயரங்களைப் பற்றியும், அதில் ஒரு இளைஞனின் துரோகச் செயல்கள் பற்றியும் எழுதினார். காஷ்மீரத்து கிராமங்களின் வாழ்வு குறித்தும், நகரங்களில் குடியேறிய மக்களின் வாழ்க்கைச் சீரழிவுகளையும் சிறுகதைகளாக எழுதினார். அவற்றில் அந்த வட்டார வழக்குச் சொற்களையே பயன்படுத்தினார்.

1930ல் சந்தர் பார்மன் கிறிஸ்டியன் கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஆங்கில இலக்கிய நூல்களை அளவிலா ஆர்வத்துடன்  படித்தார். உருது இலக்கியங்களையும் கரைத்துக் குடித்தார். 1932ல் தனது முதல் சிறுகதையான “சாது” வை வெளியிட்டார். இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய முற்போக்கு நாடக சங்கம் - ஆகியவற்றில் முக்கியத் தலைவராகவும், கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவும் இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்  பி.சி.ஜோஷி, சஜ்ஜத் ஜாகீர், பிரேம்சந்த், பால்ராஜ் சஹானி ஆகியோரின் நெருங்கிய தோழராகவும் சந்தர் திகழ்ந்தார்.

சந்தர் தனது படைப்புகளில் சாதி, மதவெறிகளைக் கடுமையாகச்சாடினார். இனக்கலவரங்கள், வன்முறைகள், பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டுமென்றார். மிகச்சிறந்த மனிதாபிமானியாகவும், சர்வதேசியவாதியாகவும் வாழ்ந்தார். கிருஷ்ண சந்தர், சல்மா சித்திக் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். அவரது மரணத்திற்குப் பின் வித்யாவதி சோப்ராவை மணந்து கொண்டார். அவருக்கு இருமகள்களும், ஒரு மகனும் பிறந்தனர். அவர் தனது வாழ்நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.

8-3-1977ல் மும்பையிலுள்ள தனது வீட்டில் சிறுவர்களுக்கான ஒரு நாவல் எழுதுவதில் ஈடுபட்டிருந்தார். “ஒரு வாத்தின் இலக்கியம்” என்று பெயரிட்டு முதல்வாக்கியத்தை எழுதிக் கொண்டிருந்த போதே திடீர் மாரடைப்பால் காலமானார்.  ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் நகரில் கிருஷ்ண சந்தர் பெயரால் ஒரு பெரிய பூங்காவும், அதன் நடுவில் அவரது சிலையும் நிறுவப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பு, பிரிவினை எதிர்ப்பு, சாதிமதவெறிகளை எதிர்த்தும், கிராமப்புற விவசாயிகளின் துயரங்கள், சிறுவர் சிறுமிகளின் அவலம் பற்றி அமர இலக்கியங்கள் படைத்துள்ளார்.