tamilnadu

img

ஹத்ராஸ் சம்பவம்: உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையின்கீழ் புலன்விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

ஹத்ராஸ் சம்பவத்தில் முன்பு பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டு, புதிதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரிடமிருந்து ஒரு மனுவைப் பெற்று, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டிருப்பதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் தான் புதிதாகப் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில்தான் விசாரணையைத் தொடர இருக்கிறது. இதில் முன்பு பதிவு செய்யப்பட்டிருந்த பாலியல் கூட்டு வன்புணர்வு மற்றும் கொலைக் குற்றங்கள் கிடையாது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், ஹத்ராஸ் சம்பவம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையின்கீழ் புலனாய்வு அமைப்புகளால் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றுதான் கோரி வந்திருக்கிறது. உத்தரப்பிரதேசக் காவல்துறை இவ்விசாரணையை மிகவும் மோசமாகக் கையாண்டது மட்டுமல்லாமல், சம்பவம் தொடர்பாக, பாலியல் கூட்டு வன்புணர்வே நடக்கவில்லை என்று வித்தியாசமான கதையைக் கட்டவிழ்த்துவிட்டது. இது தொடர்பான முதல் தகவல் அறிக்கை காலத்தை பதிவு செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காலத்தே உதவி எதுவும் செய்து தரப்படவும் இல்லை. மருத்துவமனை ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை செப்டம்பர் 22ஆம் தேதிதான் – அதாவது சம்பவம் நடந்து எட்டு நாட்கள் கழித்துத்மதான் -  பரிசோதனை செய்திருக்கிறார்கள். மேலும் தடய அறிவியல் ஆய்வுச் சோதனைக்காக மாதிரி 24ஆம் தேதிதான் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு பல நாட்கள் கழித்து பாதிக்கப்பட்ட நபரின் உடலை ஆய்வு செய்தால் அதில் விந்து எதுவும் இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். மேலும் விந்த இருந்ததற்கான அடையாளம் இடைக்காலத்தில் சுத்தம் செய்து அழிக்கப்பட்டிருக்க முடியும்.

மேலும் உத்தரப்பிரதேச அரசாங்கத்தில் வழக்கை விசாரித்த காவல்துறைத் தலைவர் பாலியல் வன்புணர்வே நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார். இது அவர்களின் ஒருதலைப்பட்சமான விசாரணையையே காட்டுகிறது. பாதிப்புக்கு உள்ளான பெண், தன்னை தாகூர் உயர்சாதியைச் சேர்ந்த நால்வல் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கினார்கள் என்று மரண வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதனை அவர் மருத்துவமனையில் இருந்தபோது காவல்துறையினரிடம் அளித்திருக்கிறார். இதுதான் சட்டத்தின்படி உண்மை என எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். எந்த புலன் விசாரணையாக இருந்தாலும், அது அவசரகதியில் திருட்டுத்தனமாக குடும்பத்தாருக்குத் தெரியாமல் நள்ளிரவில் இந்தப் பெண்ணை எரித்ததற்கான காரணம் உட்பட பரிசீலிக்கப்படக்கூடிய விதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே நாங்கள் கோருகிறோம்.    

மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம்தான் இதை விசாரணை செய்யப் போகிறது என்றால் அது நீதிபதியின் மேற்பார்வையின்கீழ் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரியுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதியின் முன் பெண்ணின் குடும்பத்தார் வாக்குமூலங்கள் பதிவு

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளார்கள். திங்கள் அன்று இவ்வாறு அவர்கள் வாக்குமூலங்கள் அளித்துள்ளார்கள். இதன் மீது இறுதி ஆணை பிறப்பிக்கப்படுவதற்கு முன், மாநில அரசு சார்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணை நவம்பர் 2க்கு ஒத்திவைக்கப்பட்டது.  

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சீமா குஷ்வாஹா கூறுகையில், குடும்பத்தார் நீதிமன்றத்தில் மூன்று முக்கிய கோரிக்கைகளை சமர்ப்பித்தனர் என்றார். அவை அனைத்தும் பரிசீலிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியதாகவும் அவர் கூறினார்.

முதலாவதாக இந்த வழக்கு விசாரணை உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட வேண்டும். இரண்டாவதாக, விசாரணை விவரங்கள் ஊடகங்களில் கசியக்கூடாது. ஏனெனில் அவை விசாரணையை திரித்துத் தங்கள் இஷ்டத்திற்கு கதையளந்துகொண்டிருக்கின்றன. மூன்றாவதாக, விசாரணை முடியும்வரை பெண்ணின் குடும்பத்தார் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். இவை தொடர்பாக பெண்ணின் குடும்பத்தார் சார்பாக தான் ஓர் உறுதிவாக்குமூலத்தை நவம்பர் 2 அன்று தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறினார்.  

நீதிமன்றத்தில் காவல்துறையினர், தாங்கள் பெண்ணின் குடும்பத்தாரின் சம்மதத்துடன்தான் பெண்ணின் சடலத்தை எரித்ததாகக் கூறினார்கள். ஆனால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது எதுவும் கூறாமல் மவுனம் சாதித்தனர். குடும்பத்தார் காலை 5 மணிக்கு எரியூட்டப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் காவல்துறையினர் குடும்பத்தினர் இல்லாமலேயே அவர்கள் எவ்விதமான முறையான சடங்குகளையும் செய்வதற்கு முன்பே, நள்ளிரவிலேயே எரியூட்டிவிட்டனர்.

நீதிமன்றம், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்று காவல்துறையினர் கூறியபோது, நீதிமன்றம் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி, அப்படியெனில் அதிக அளவில் காவல்துறையினரை அழைத்திருக்க வேண்டியதுதானே என்று கூறியதாகவும் அவர் கூறினார்.

(ந.நி)