tamilnadu

img

கார்ப்பரேட் ஆதரவு கூட்டுக்களவாணி முதலாளித்துவம் மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

யெஸ் பேங்க் தகர்ந்திருப்பது, ஆட்சியாளர்களின் கார்ப்பரேட் ஆதரவு கூட்டுக் களவாணி முதலாளித்துவக் கொள்கை மிக மோசமான நிலையை எட்டியிருப்பதைக் காட்டுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் செயல்பட்டுவந்த தனியார் வங்கியான யெஸ் பேங்க் தகர்ந்திருப்பது நாட்டில் தனியார் வங்கிகள் செயல்படும் விதம் குறித்தும், அவற்றைச் சரியானமுறையில் செயல்படும் விதத்தில் காலத்தே தலையிட வேண்டிய இந்திய ரிசர்வ் வங்கியின் தோல்வியைக் குறித்தும் சங்கடத்திற்குள்ளாக்கும் எண்ணற்ற கேள்விகளை எழுப்பி இருக்கின்றன. யெஸ் பேங்க் நிகழ்வு கார்ப்பரேட் ஆதரவு கூட்டுக்களவாணி முதலாளித்துவத்தின் மிக மோசமான எடுத்துக்காட்டாகும். வங்கியின் பதிவேடுகளிலிருந்து, வங்கியின் கடன் கணக்கு 2014 மார்ச் மாதத்தில் 55,633 கோடி ரூபாயாக இருந்தது, 2019 மார்ச்சில் 2,41,999 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது எனக் காட்டுகிறது. ஆளும் கட்சியினருக்கு வேண்டிய கார்ப்பரேட்களுக்கு வங்கி அள்ளித் தந்திருக்கிறது. இவ்வாறு அள்ளித்தந்துள்ள கார்ப்பரேட்டுகளில் அனில் அம்பானி போன்றவர்களின் நிதி நிலைமை மிக நிலையற்ற நிலையில் இருந்தபோதிலும், வங்கி இதுபோன்ற நபர்களுக்கு அள்ளிக்கொடுத்திருக்கிறது. 
இந்த வங்கியின் தடுமாற்றமான நிலை குறித்து இந்திய ரிசர்வ் வங்கிக்குத் தெரிய வந்திருந்தபோதிலும், அது காலத்தே செயல்பட்டு இதனைச் சரிசெய்ய முன்வரவில்லை. இதன் மூலம் இதில் டெபாசிட் செய்திருந்தவர்களின் நலன்களுக்குக் கேடு விளைவித்துள்ளது. நடப்பு ஆட்சியாளர்கள் கூட்டுக் களவாணி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக இருந்து இந்தியப் பொருளாதாரத்தை நாசமாக்கி வருவதை இனியும் மறைத்திட முடியாது.  
இப்போது இந்த வங்கியின் பங்குகளில் 49 சதவீதத்தை வாங்கிக்கொள்ளுமாறு பாரத ஸ்டேட் வங்கி பணிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு லாபம் என்றால் தனியார்மயம் என்றும், நஷ்டம் என்றால் தேசியமயம் என்றும் மாற முடியாது. வங்கிகளில் டெபாசிட் செய்கிறவர்களின் நலன்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும். இந்திய ரிசர்வ் வங்கி, யெஸ் பேங்கிலிருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக திரும்பப்பெற முடியாது என்று விதித்துள்ள உத்தரவை செல்லுபடியாகாது என்று உடனடியாக அறிவித்திட வேண்டும்.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.

(ந.நி.)