புதுதில்லி:
நவம்பர் 7 முதல் 30 ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா என்பதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் உள்ள தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில் இந்தியன் சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிடி நெட்வொர்க் என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவில், ‘கொரோனா காலத்தில் காற்றின் தரம் மோசமாக இருப்பதால் தடுப்பு நடவடிக்கையாக தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தது.
இந்த மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயத்தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, ‘தில்லி,அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள், சுற்றுச்சூழல் நலனை கருத்தில் கொண்டு, வருகிற 7- ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து தில்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் தலைமைச்செயலாளர்கள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தில்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம், தில்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். வழக்கு விசாரணை நவம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராஜ் பஞ்ஜ்வானி, ஷிபானிகோஷ் ஆகியோரை நம்பிக்கை அறிவுரையாளராக பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.