tamilnadu

img

நீங்களே சொன்னபடி, முஸ்லிம்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்...

புதுதில்லி:
இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு, “புதிய அரசு முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைவரின் நம்பிக்கையையும் பெறுவதற்கு முயலும்” என்று நரேந்திர மோடி பேசியிருந்தார். மோடியின் பேச்சு பாஜகவினருக்கே வியப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.

இந்நிலையில், மோடியின் இந்தப் பேச்சைக் குறிப்பிட்டு, முஸ்லிம் சமூகத்தின் 20 தலைவர்கள், கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில், முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தி நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அதிகப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.“முஸ்லிம் சமுதாயத்தின் முக்கியப் பிரச்சனைகளின் மீது மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். மோடி கூறியபடி முஸ்லிம் சமுதாயத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அந்த சமூகத்திடன் மத்திய அரசு உரையாடல்களை அதிகப்படுத்த வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் இந்த நாட்டின் குடிமகன்களான முஸ்லிம்களும் இடம்பெற வேண்டும்” என கடிதத்தில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜமாத் உலமா இ ஹிந்த் அமைப்பின் தலைவர் மௌலனா மஹ்மூத் மதானி, தில்லி சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள்தலைவர் கமால் பரூக்கி, ஹைதராபாத் கல்வி நிறுவனத் தலைவரான டாக்டர் பக்ருதீன் முகமது, முன்னாள் வருமான வரித்துறை ஆணையர் குயாசிர் ஷாமின் உள்ளிட்டவர்கள் கடிதத்தில் கையெழுத்திட் டுள்ளனர்.