வேலூர், செப். 8- அடுத்த கல்வியாண்டு (2020-21) முதல் விஐடி நுழைவுத் தேர்வில் திறனாய்வு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விஐடி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020 - 2021ஆம் கல்வியாண்டு முதல் விஐடி நுழைவுத் தேர்வுகளில் ஆங்கிலம், கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகியவற்றுடன் திறனாய்வுப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்களின் பரிந்துரைப்படி இப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உள்ள முன்னோடி பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாணவர்களின் திறனாய்வு திறனை பரிசோதிக்க இப்பிரிவை நுழைவுத் தேர்வுகளில் வைத்துள்ளன. இதையடுத்து, விஐடி நுழைவுத் தேர்வில் இயற்பியல் 35, வேதியியல் 35, கணிதம் அல்லது உயிரியல் 40, திறனாய்வு 10, ஆங்கிலம் 5 என்ற அடிப்படையில் கேள்விகள் அளிக்கப்படும். நுழைவுத் தேர்வின் கால அளவு இரண்டரை மணி நேரமாகும். இந்த நுழைவுத் தேர்வில் நெகடிவ் மதிபெண் கிடையாது. புதிய நுழைவுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் விரைவில் விஐடியின் www.vit.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.