tamilnadu

img

புதுச்சேரி பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுச்சேரி மாநிலத்தில் 5 பேராசிரியர்களை பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்க்கும்படி அம்மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் 2004-ஆம் ஆண்டுக்கு முன் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஜி.பி.எப்., எனப்படும் பழைய ஓய்வூதிய திட்டமும், அதன் பின் சேர்ந்தவர்களுக்கு என்.பி.எப்., எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதிய பலன்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி திட்டம் ஒன்றும் செயல்படுத்தப்படுகின்றது. இந்த திட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்களிப்பு செலுத்தினாலும், ஓய்வூதியம் கிடைக்காது.
இந்த சூழலில் காரைக்கால் கல்வியியல் கல்லுாரியில் 2004ஆம் ஆண்டிற்கு முன் சேர்ந்து, பணிபுரிந்து வரும் 5 பேராசிரியர்கள் சி.பி.எப்., எனப்படும் பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருந்தனர். இதன் மூலம் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதனை எதிர்த்து 5 பேராசிரியர்களும் கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 
இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் மனுதாரர்கள் பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி திட்டமான சி.பி.எப்., திட்டம் வேண்டும் என கையெழுத்திட்டு உள்ளனர். எனவே ஜி.பி.எப்., திட்டத்தின் கீழ் பலன் கேட்க முடியாது என வாதிட்டார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யூ, 5 பேராசியர்களும் 2004-ஆம் ஆண்டிற்கு முன் பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களை இந்த வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தான் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. எனவே பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் சேர்த்து பழைய ஓய்வூதிய பலன்களை பெற தகுதியுடையவர்கள். இதுமட்டுமின்றி அரசு ஊழியர்கள் ஜி.பி.எப்., திட்டத்தில் சேர நிதி ஒதுக்கப்படுவதில்லை எனவும் வாதிட்டார்.
இரண்டு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மஞ்சுளா, 5 பேராசிரியர்களையும் 8 வாரத்திற்குள் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்க்கவும், நிதி துறையை அணுகி அரசின் பங்களிப்பு செய்யவும் உத்தரவிட்டார்
சி.பி.எப்., எனப்படும் பங்களிப்பு வருங்கால வைப்பு நிதியை 1988-ஆம் ஆண்டே ஒன்றிய அரசு கைவிட்டது. ஆனாலும் புதுச்சேரி அரசு இன்னும் அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, புதுச்சேரி அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.