பீகார் உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பாட்னா நகரின் எஸ்.கே. பூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இதுவரை 29 பேர் பலியாகி உள்ளனர்.
கனமழைக்கு இதுவரை பொதுமக்களில் 29 பேர் பலியாகி உள்ளனர் என்று பீகார் பேரிடர் மீட்பு குழு தெரிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை எடுத்து சென்று வழங்குவதற்காக 2 ஹெலிகாப்டர்களை உதவிக்கு அனுப்பி வைக்கும்படி இந்திய விமான படையிடம் பீகார் அரசு கேட்டு கொண்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம்
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கனமழையால் பெரும் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 5 நாட்களில் மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.