tamilnadu

img

சிபிஎம் ஒன்றியக்கவுன்சிலர் மீது கொலைவெறித் தாக்குதல்... திருவட்டார் அருகே சமூக விரோதிகள் அட்டூழியம்....

நாகர்கோவில்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவட்டார் ஊராட்சி ஒன்றியக்  கவுன்சிலர்  சகாய ஆன்றனி மீதுசமூக விரோதக் கும்பல்கொலைவெறித் தாக்குதல்நடத்தியுள்ளது. 

இதனைக் கண்டித்தும் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டக்குழு உறுப்பினர், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர், கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் என பல்வேறுபொறுப்புகளை வகிப்பவர் சகாய ஆன்றனி (48). அன்றாட மக்கள் பணியை முடித்துவிட்டு அக்டோபர் 7 புதனன்று இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். சுவாமியார்மடம் அருகில் செட்டிச்சியார்விளையில் உள்ள அவரது வீட்டின் அருகில் வந்தபோது இரவு சுமார்8 மணியளவில்  சமூகவிரோதிகள் இரும்புத் தடிகளால் சகாய ஆன்றனியை  கொடூரமாக தாக்கினர். அலறல் சத்தம் கேட்டு அருகில்உள்ளவர்கள் அவரை மீட்டனர்.  திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி குமாரி வாலன்டினா திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கண்டனம்- ஆர்ப்பாட்டம்
சகாய ஆன்றனி தாக்கப்பட்டதற்கு கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக விரோத கும்பலை உடனே கைது செய்ய வலியுறுத்தி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.