tamilnadu

நாகப்பட்டினம் முக்கிய செய்திகள்

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
சீர்காழி, செப்.18- நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி, சீனிவாசன், முத்துராஜா ஆகியோர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மாவட்டம் விட்டு வேறு மாவட்டத்திற்கு திடீர் இடமாறுதல் செய்யப்பட்டதை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் வேல்கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளார் சௌந்திரபாண்டியன் கண்டன உரையாற்றினார். ஊரக வளர்ச்சிதுறை  அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கோகோ போட்டியில் அரசு கல்லூரி வெற்றி
சீர்காழி, செப்.18-நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலைக்கல்லூரி அணியினரும் அதனை எதிர்த்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அணியும் கோ.கோ ஆண்கள் விளையாட்டுப் போட்டியில் களம் இறங்கின. இதில் புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 10 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்சியாளர் பிரபாகரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

கொள்ளிடத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு
சீர்காழி, செப்.18-நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி-கொள்ளிடம் பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு அல்லது பகல் நேரங்களில் கட்டாய மின்வெட்டு ஏற்படுகிறது. முன் அறிவிப்பு இன்றி ஏற்படும் இந்த மின் தடை எதற்காக ஏற்படுகிறது என்று யாருக்கும் தெரிவதில்லை. கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டாரங்களில் ஏற்படும் மின்வெட்டால் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டால் பள்ளி மாணவர்களும் குழந்தைகளும் சிரமம் அடைகின்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக, கொள்ளிடம் ஆற்றிலிருந்து, கொள்ளிடம் கூட்டு குடிநீர்த் திட்டத்தின் மூலம் செல்லும் குடிநீர், கிராமங்களில் போய் சேராமல் இருப்பதால், அடிக்கடி குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு இந்த மின்வெட்டு காரணமாகி விடுகிறது. மாதந்தோறும் பராமரிப்பு பணியைக் காரணம் காட்டி காலை முதல் மாலை வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் நடைபெற்றும் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மின் வாரிய உயர் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.