நாகப்பட்டினம், அக்.16- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்டக் குழு சார்பில், நாகப்பட்டினம், யாழிசை மன்றத்தில் திங்கட்கிழமை அன்று, “விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும் அதற்கான தீர்வுகளும்” என்னும் பொருளில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.என்.அம்பிகாபதி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் துவக்கவுரையாற்றினார். மாநிலத் துணைச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் ஆகியோர் கருத்துரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளரும் மாநிலத் துணைத் தலைவருமாகிய ஜி.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விவசாயிகள் சங்க அகில இந்தியத் துணைச் செயலாளர் விஜு.கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்திற்காக நாகை மாவட்டம் சார்பில் 27,000 சந்தாக்களும், திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் 30,000 என 57 ஆயிரம் சந்தாக்கள் விஜு கிருஷ்ணனிடம் அளிக்கப்பட்டன. சங்கத்தின் நாகை மாவட்டப் பொருளாளர் டி.ராசையன் நன்றி கூறினார்.