மும்பை, ஜுன் 18- இந்தியா மீதான அமெரிக்காவின் வர்த்தகப் போரால் இந்தியாவின் நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி சரிவைச் சந்திக்கும் என்று ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்தே சீனா, இந்தியா, ஈரான் உள்ளிட்ட உலக நாடு களுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டு வரு கிறார். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் உள்ளிட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியதோடு, அமெரிக்கா வுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளில் முன்னுரிமை பெற்ற நாடு என்ற அந்தஸ்தி லிருந்து இந்தியாவை விலக்கியது. இதற்குப் பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பாதாம், வால்நட், பருப்பு உள்ளிட்ட 29 பொருட்களுக்கான வரியை இந்திய அரசு உயர்த்தியது.
இந்தியாவின் அந்தஸ்தை அமெரிக்கா நீக்கியதால் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும் எனவும், குறிப்பாக நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி சரிவைச் சந்திக்கும் எனவும் கிரிசில் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கிரிசில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவின் அந்தஸ்தை அமெரிக்கா நீக்கியதால் நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்படும். ஏனெனில் 2018ஆம் ஆண்டு ஏற்றுமதியில் 15 சதவிகிதம் அளவு, முன்னுரிமை நாடு என்ற சலுகையால்தான் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இப்போது நகை ஏற்றுமதிக்கு அங்கு கூடுதலாக 7 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. இது உள்நாட்டில் ஏற்றுமதியாளர்களிடையே உள்ள போட்டித்தன்மையைக் குறைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த வணிக ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்களிப்பு 15 சதவிகிதமாக இருக்கிறது. ஆனால் அமெ ரிக்காவின் இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு வெறும் 2 சதவிகிதம் மட்டுமே. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை 31 பில்லியன் டாலரிலிருந்து 24.2 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.