tamilnadu

திருப்பூர் முக்கிய செய்திகள்

காதலிக்க கட்டாயப்படுத்தியதால் விரக்தி சிறுமி தற்கொலை: இருவர் கைது

திருப்பூர், மே 15 –திருப்பூர் ஆண்டிபாளையத்தில் காதலிக்க கட்டாயப்படுத்தியதால் சிறுமி சாணிப்பவுடரைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.திருப்பூர் ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது 17 வயது மகள் பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வந்தார். இவருடன் நட்பாகப் பழகிய அருள்குமார் (16) இவரை காதலிப்பதாகக் கூறி இருக்கிறார். தொடர்ந்து இவர் கட்டாயப்படுத்திய நிலையில், அருள்குமாரின் நண்பர் மணிகண்டன் (22) என்பவரும் சிறுமியிடம் அவருக்கு ஆதரவாக தொடர்ந்து கட்டாயப்படுத்தி இருக்கிறார். இதனால் மன விரக்தி அடைந்த சிறுமி திங்களன்று இரவு வீட்டில் சாணிப்பவுடரை குடித்துவிட்டார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தபோதும் சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாயன்று உயிரிழந்தார். இது குறித்து சிறுமியின் தந்தை நாகராஜ் கொடுத்த புகாரின்பேரில் அருள்குமார், மணிகண்டன் இருவரையும் திருப்பூர் மத்திய காவல் நிலைய காவலர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.


பெண் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர் சந்திராபுரம் கிழக்கு பண்ணாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மனைவி சங்கீதா (32). கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெகதீஷ் விபத்தில் சிக்கிய நிலையில் அவரது மருத்துவச் செலவுக்காக சங்கீதா ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார். இந்நிலையில் ஜெகதீஷ் மனைவியை விட்டு தனியாக சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல் விரக்தி அடைந்த சங்கீதா கடந்த திங்களன்று இரவு வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்கீதாவின் அம்மா வசந்தாமணி கொடுத்த புகாரின்பேரில் ஊரக காவல் நிலையத்தார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.