திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார், க.பொன்னுசாமி மற்றும் சக்தி பிரகாஷ் ஆகியோர் திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில் கொடுமுடி வட்டத்தில் நொய்யல் ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ள "அஞ்சூர்" கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 1500 ஆண்டுகள் பழமையான இரண்டு வெண் சாமரம் வீசும் பெண் சிற்பங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதைப் பற்றி ஆய்வு மைய இயக்குனர் பொறியாளர் சு.ரவிக்குமார் மேலும் கூறியதாவது: அஞ்சூர் பாண்டீஸ்வரர் கோயில் நிர்வாகி தங்கமுத்து கொடுத்த தகவலின் அடிப்படையில் இங்குள்ள பாண்டீஸ்வரர் மற்றும் கொற்றவை கோயிலின் பின்பகுதியில் இருந்த முட்புதர்களுக்கு இடையே ஆய்வு செய்தோம். அப்போது கொங்கு மண்டலத்தில் உள்ள சிற்ப வடிவங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த வெண்சாமரம் வீசும் பெண் சிற்பங்களைக் கண்டுபிடித்தோம். இச்சிற்பங்களில் உள்ள உருவம் குறிப்பிடத்தக்க சிறப்பு உடையது. இந்தச் சிற்பங்கள் கொங்கு மண்டலத்திலேயே வடிக்கப்பட்ட சிற்பங்களில் காலத்தால் முற்பட்ட கலைச்செல்வம் நிறைந்தவை ஆகும். இறைவனுக்குரிய எட்டு மங்கலச் சின்னங்களில் வெண்சாமரமும் ஒன்று. இச்சிற்பங்கள் இங்குள்ள கிபி 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை கோயிலுக்கு பின்புறம் இருப்பதால் துவாரபாலகி ஆக ஏற்றுக்கொள்ளலாம்.
வலது பக்கம் வெண்சாமரம் உள்ள சிற்பம்
150 செ.மீ உயரமும் 45 செ.மீ அகலமும் கொண்ட இச்சிற்பத்தில் உள்ள பெண் தனது இடது காலை ஊன்றி, வலது காலைச் சிறிது மடக்கித் இருபங்கத் தோற்றத்தில் உள்ளார். வலது கையை மடக்கிப் பிடித்துள்ள வெண்சாமரம் தன் வலது தோளில் சாய்ந்து காணப்படுகிறது. தன் இடது கையை ஊரு ஹஸ்த முத்திரையில் தன் தொடையின் மீது பதித்த நிலையில் இச்சிற்பம் காணப்படுகிறது. இடையில் இடைக் கச்சை ஆடைக் காணப்படுகிறது இடைக்கச்சையின் வலதுபுறத்தில் தொங்கிய நிலையில் பசும்பை என்னும் மங்கலப் பொருட்கள் வைக்கும் சுருக்குப்பை காணப்படுகிறது. காதில் குழைவகைக் காதணியும், கழுத்தில் கண்டிகை மற்றும் சரப்பளி வகை அணிகலன்களும், கையில் முழங்கைக்கு மேல் கடகவளை அணியும் கை மணிக்கட்டில் சூடகமும் காணப்படுகின்றன. தலையில் மகுடம் அணிந்து காணப்படும் இச்சிற்பம் சிற்பக்கலைக்கு ஒரு தனிச்சிறப்பு மிக்க மணிமகுடமாக திகழ்கிறது.
இடது பக்கம் வெண்சாமரம் உள்ள சிற்பம்
120 செ.மி உயரமும் 60 செ.மீ அகலமும் கொண்ட இச்சிற்பத்தில் உள்ள பெண் தன் வலது மற்றும் இடது காலை சிறிது மடக்கி சதுர நடன அமைப்பில் உள்ளார். தன் வலது கையை மடக்கிப் பிடித்து உள்ள வெண்சாமரம் இடது தோளில் சாய்ந்து காணப்படுகிறது. இடது கையை தொடையின் மேல் வயிற்றுப்பகுதியில் ஏந்தி அர்த்தச் சந்திர முத்திரையில் உள்ளார். காதில் பத்திர குண்டலமும், கழுத்து மற்றும் கைகளில் அணிகலன்கள் அணிந்து காணப்படும் இச்சிற்பங்கள் சாத்விகத் திரு உருவ அமைப்பில் நின்றகோலத்தில் காணப்படுகின்றன என்றார்.
தொல்லியல் அறிஞர் கருத்து
இச்சிற்பங்களை ஆய்வு செய்த தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குனர் முனைவர் ர.பூங்குன்றனார், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட வெண்சாமரம் வீசும் பெண்களின் உருவம் கொங்கு மண்டலத்தில் உள்ள கலைச் சிற்பங்களுக்கு எல்லாம் காலத்தால் முற்பட்டவையாகத் திகழ்கின்றன. இரு சிற்பங்களும் துடி இடையோடு ஒரு காலை ஊன்றி மறு காலைச் சிறிது மடக்கி உடல் வளைவோடு உள்ளதால் இவை கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும் என்று தெரிவித்தார்.