திருச்சி அரசு மருத்துவமனையில் கடும் அவலங்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேரடி ஆய்வு அறிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் நிலை குறித்து நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு வியாழனன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது.
மருத்துவமனையின் வரலாறும் தற்போதைய நிலையும்
பத்திரிகையாளர் சந்திப்பில் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர் கூறியதாவது: தமிழகத்தின் மையப் பகுதியாக உள்ள திருச்சி மாவட்டத்தில் 1857 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனை படிப்படியாக உயர்ந்து 1997 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகே 25 ஏக்கரில் தமிழறிஞர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் நினைவு அரசு மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையோடு இணைக்கப்பட்டது. 1600 படுக்கை வசதியுடன், தினசரி சுமார் 5500 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெறும் இந்த மருத்துவமனையில் தினமும் 500 பேர் பல்வேறு மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு உள்நோயாளியாக அனுமதிக்கப்படுகின்றனர். மருத்துவமனையில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் நல மையம், மகப்பேறு சிகிச்சை, இதய சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை என 27 பிரிவுகளில் மருத்துவ சேவை மற்றும் 7 தனி ஐசியு -க்கள் கொண்ட மருத்துவமனையாக உள்ளது.
மருத்துவர் மற்றும் செவிலியர் பற்றாக்குறை
வருகிற நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இல்லாமல் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. மருத்துவர்கள் காலை மட்டும் நோயாளிகளைப் பார்த்து சிகிச்சை வழங்குவதால், பின்னர் ஏதேனும் உபாதைகள் ஏற்பட்டால் தகுந்த சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் வேதனைப்படுகின்றனர். மருத்துவக் கல்லூரி மாணவர்களை பயிற்சி என்ற பெயரில் அவர்களைக் கொண்டுதான் முழுமையாக அரசு மருத்துவமனை இயங்கக்கூடிய நிலையில் உள்ளது. பத்து நோயாளிக்கு ஒரு செவிலியர் என்ற நிலை திருச்சி அரசு மருத்துவமனையில் கிடையாது. ஒரு வார்டுக்கு ஒன்று அல்லது இரண்டு செவிலியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். மூன்று ஷிப்ட்களில் காலை ஷிப்ட்டில் மட்டும் ஓரளவு செவிலியர்கள் உள்ளனர்; மற்ற இரண்டு ஷிப்ட்களில் கடும் பற்றாக்குறை உள்ளது. இதனால் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவை கிடைக்காமல் அவதிப்படும் நிலை உள்ளது.
மருந்துகள் கடும் தட்டுப்பாடு
எந்த நோயாக இருந்தாலும் பாராசிட்டமால் மாத்திரை மட்டுமே வழங்கப்படுவதாக நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். நோயாளிகள் தங்களின் மருத்துவ தேவை நிறைவேறவில்லை என கேட்கும்போது அதற்கான மாத்திரைகளை இங்கே வழங்க முடியாது, வெளியே வாங்கி வரும்படி எழுதிக் கொடுக்கும் அவல நிலை உள்ளது. குறிப்பாக எலும்பு முறிவு பிரிவில் வலி நிவாரண மாத்திரைகள் எதுவும் அரசு மருத்துவமனையில் இருப்பில் இல்லை. நோயாளிகளுக்கு செலுத்தும் குளுக்கோஸ் மிகப்பெரிய தட்டுப்பாடாக உள்ளது. விஷக்கடி மருந்துகள் முறையாக கையாளப்படுவதில்லை, நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மாதாந்திர மருந்துகள் முழுமையாக வழங்கப்படுவதில்லை. மருந்து வழங்குமிடத்தில் அதிகமான நோயாளிகள் வருகையால் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது.
சுகாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறி
நோயாளிகள் பயன்படுத்திய மெத்தை உறை, தலையணை உறை போன்றவை துவைத்து சுத்தப்படுத்தப்படுவதாகவே தெரியவில்லை. ஒரு நோயாளி பயன்படுத்தியதையே மற்ற நோயாளிகளும் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டே இருக்கக்கூடிய அவல நிலை உள்ளது. மருத்துவமனையில் கழிவறைக்கு பயன்படுத்தக்கூடிய தண்ணீருக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு உள்ளது. ஒரு குவளை தண்ணீர் நிரம்புவதற்கு பல நிமிடங்கள் ஆவதால் கழிவறையை சுத்தப்படுத்த முடியாததால் கழிவறைக்கு உள்ளே சென்று வர முடியாத அளவிற்கு சுகாதார பிரச்சனை ஏற்படுகிறது. வார்டுகளில் காலை மாலை இருவேளையும் குப்பைகளை சுத்தம் செய்து கிருமி நாசினி கொண்டு துடைப்பது கிடையாது. வார்டுகளில் அதிகமான துர் நாற்றம் வீசுகிறது. பெருச்சாளிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. மகப்பேறு வார்டில் சுவற்றில் பைப் லைனில் தண்ணீர் சொட்டி தரையில் தண்ணீர் நிற்கிறது. வெளியில் நடைபாதையிலும் மெயின் பைப்பில் தண்ணீர் ஒழுகுகிறது.
குடிநீர் கடும் தட்டுப்பாடு
குடிநீர் மற்றும் வெந்நீர் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் பல இடங்களில் இருந்தும் அது செயல்பாட்டில் இல்லாமல் பழுதடைந்து உள்ளது. இதனால் வெளியே உள்ள உணவக வளாகங்களில் வரும் குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் அவலம் உள்ளது. உடனடியாக அதை சரி செய்து தொடர்ந்து பராமரிக்கக்கூடிய பணி செய்திட வேண்டும். டயாலிசிஸ் நோயாளிகள் எண்ணிக்கை பெருகி வரும் சூழலில் படுக்கை வசதி குறைவாக உள்ளது. இதனால் சிகிச்சையில் காலதாமதம் ஏற்படுகிறது. டயாலிசிஸ் நோயாளிகளுக்கு ஒரு நபருக்கு 150 முதல் 200 லிட்டர் வரை சுத்தமான ஆர்.ஓ குடிநீர் வேண்டும். பல நேரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் டயாலிசிஸ் செய்வதே தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகிறது.
சிறப்பு மருத்துவ சேவைகள் இல்லாமை
சிறுநீரக நோய், இதய அறுவை சிகிச்சை மற்றும் விபத்துகளால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்டவைகளுக்கு நரம்பு நாள இணைப்பு சிகிச்சை என்பது திருச்சி அரசு மருத்துவமனையில் இல்லாததால் தஞ்சை மருத்துவமனைக்கு இங்குள்ள நோயாளிகளை பரிந்துரைத்து அனுப்பி வைக்கும் சூழல் உள்ளது. புற்றுநோய்க்கான கீமோ தெரபி, கதிரியக்க சிகிச்சை போன்றவற்றிற்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. உயர்தர இருதய அறுவை சிகிச்சைக்கான வசதிகள் இல்லை. மனநல மருத்துவ சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லாமல், பராமரிப்பதற்கான ஊழியர்களும் இல்லாமல் பல நோயாளிகள் துணி கூட இல்லாமல் பராமரிப்பு இல்லாமல் அப்படியே கிடக்கும் நிலை உள்ளது.
வார்டு மேனேஜர் இல்லாமை
காப்பீடு திட்டத்திற்கான வழிமுறைகளை நோயாளிகளிடம் தகுந்த ஆவணங்களை பெற்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு கொடுத்து உரிய சிகிச்சை பெற்றிட உதவிடும் வகையில் வார்டுகளில் பணியாற்றக்கூடிய மேனேஜர் இல்லாததால் பயிற்சி மாணவர்களைக் கொண்டு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பெரும் காலதாமதம் ஏற்படுகிறது. காப்பீடு திட்டங்களை பயன்படுத்தி சிகிச்சை செலவினங்களை விட கூடுதலாக காப்பீடு பணத்தை பெறுவது போன்ற முறைகேடுகள் நடக்கின்றன.
மகப்பேறு மருத்துவ வார்டுகளில் உள்ள அவலங்கள்
மகப்பேறு மருத்துவ வார்டுகளில் போதுமான படுக்கை வசதிகள் கிடைக்காமல் பிரசவித்த தாய்மார்கள் தரையில் படுக்க வைக்கும் அவலங்கள் தொடர்ந்து கொண்டுள்ளது. மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகளை கனிவான கவனத்துடன் நடத்துவது கிடையாது. கடுஞ்சொற்களால் திட்டக்கூடிய நிலை தொடர்ந்து கொண்டுள்ளது. கழிவறைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படாமலும், பல கழிவறைகள் பூட்டி வைத்துள்ள அவல நிலையும் உள்ளது. இந்த வார்டுகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஆண் குழந்தை பிறந்தால் ரூ.2000 முதல் ரூ.3000 வரையும் பெண் குழந்தை பிறந்தால் ரூ.1000 முதல் ரூ.2000 வரையும் கையூட்டு கேட்டு தொந்தரவு செய்வதும் அங்கு வாடிக்கையாக உள்ளது.
உணவு மற்றும் தயாரிப்பக குறைபாடுகள்
உணவு தயாரிக்கப்படும் சமையல் அறைகள் சுகாதாரமான முறையில் சுத்தம் செய்யப்படுவது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. மேலும் உணவுகள் தரம் இல்லாமலும், சுவையில்லாமலும் இருப்பதாகவும் நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். உணவு கொண்டு வந்து கொடுப்பவர்கள் கீழ் உள்ள தளங்களில் மட்டுமே கொடுக்கப்படுகிறது. மேல் தளங்களில் உள்ள நோயாளிகள் கீழே சென்று வாங்குவதில் சிரமம் ஏற்படுவதால் உணவு மற்றும் பால் வாங்காமல் விட்டுவிடும் நிலையும் உள்ளது. இதனை போக்கிட அனைத்து வார்டுகளிலும் உணவு கொண்டு செல்வதை உறுதி செய்திட வேண்டும்.
அறுவை சிகிச்சைகளில் காலதாமதம்
மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக வரக்கூடிய நோயாளிகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் பல நாட்கள் இழுத்தடிக்கப்படும் சூழல் உள்ளது. காப்பீடு திட்டத்தின் ஒப்புதல் பெறுவதற்காக காலதாமதமும் மருத்துவர்களின் தேதி கிடைக்காமல் காலதாமதமும் ஏற்படுவதாக நோயாளிகள் கூறுகின்றனர். இதனால் பல நோயாளிகள் வலிகளுக்கும் இன்னலுக்கும் ஆளாகும் சூழல் உள்ளது.
ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை வசதிகளில் உள்ள அவலங்கள்
ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளுக்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. அப்படியே பரிசோதனை செய்தாலும் முடிவுகளை தருவதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய அவல நிலை உள்ளது.
பிற முக்கிய பிரச்சனைகள்
இரு சக்கர வாகனங்களை பராமரிப்பதில் ஏற்பட்டுள்ள குறைபாட்டினால் அதிகமான இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போய்க் கொண்டிருக்கக் கூடிய நிலை உள்ளது. நோயாளிகளை அழைத்துச் செல்லும் பேட்டரி கார்கள் சரிவர இயக்கப்படாமல் காட்சி பொருளாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தினால் பல நோயாளிகள் பயன்பெறுவார்கள். உடற் கூராய்வு செய்வதற்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தது ரூ.2000 முதல் ரூ.3000 வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை செய்வது என்ற எழுதப்படாத விதி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து பின்பற்றி வரக் கூடிய அவல நிலை உள்ளது. உறுப்பு தானம் பெறப்பட்டு நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்வதில் பதிவு செய்யப்பட்ட வரிசையில் நோயாளிகளுக்கு உறுப்புகளை வழங்காமல் ஊழல் முறைகேடுகளில் மருத்துவர்கள் ஈடுபட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு உடனடியாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பயிற்சி மாணவர்களுக்கான சேவை குறைபாடுகள்
பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தனியான ஓய்வறை, கழிவறைகள் இல்லாமல் நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளையே பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தொற்று நோய்கள் பயிற்சி மாணவர்களுக்கு அதிகமாக ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பயிற்சி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் காலத்தை விட மருத்துவமனையில் பணி வாங்கும் காலம் அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதனால் மருத்துவ பயிற்சி மாணவர்கள் முழுமையாக பாடங்களை கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையின் நிலை
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. மதியம் 12.30 மணி வரைதான் மருத்துவமனை செயல்படுகிறது. அதன் பிறகு எவ்வித மருத்துவ கவனிப்பும் கிடையாது என்பது போன்ற நடைமுறையில் மருத்துவமனைகளில் உள்ள குறைப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தனியார்மயமாக்கல் முயற்சிக்கு எதிர்ப்பு
தற்போது புதிய திட்டமாய் தனியார் மருத்துவமனைகளுக்கு ஓரு சில படுக்கைகளை ஒதுக்கி மலிவான கட்டணம் பெற்று மருத்துவ சேவை அளிக்கப்படும் என்ற வகையில் திட்டம் உருவாக்கப்பட்டு இந்த திட்டத்தில் திருச்சி அரசு மருத்துவமனையும் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. மேலும் தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் டயாலிசிஸ் மருத்துவ சேவை தனியார் பங்களிப்புடன் துவக்கப்படும் என்ற அறிவிப்பும் மெல்ல மெல்ல தனியார்மயப்படுத்திட வாய்ப்பாக அமையும். எனவே பிபிபி என்ற திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தாமல் முழுமையாக அரசே ஏற்று நடத்த வேண்டும்.
வரவேற்பு
திருச்சி அரசு மருத்துவமனையில் 1400 கோடி ஒதுக்கீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டுமானப்பணி நடைபெற்று வருவதை வரவேற்கிறோம். நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய மருத்துவ சிகிச்சை மக்களுக்கு கிடைக்க செய்வதோடு மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும். ஏராளமான தன்னார்வல அமைப்புகள் தினமும் நோயாளிகளுக்கும் உடன் இருப்பவர்களுக்கும் உணவளிக்கும் சேவையை தொடர்ந்து வருகின்றன. மக்களுக்கு மிகப்பெரிய உதவியாக உள்ளது.
கையெழுத்து இயக்கம் அறிவிப்பு
திருச்சி அரசு மருத்துவமனையில் நிலவிவரும் அவலங்களை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிடும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகளின் சார்பில் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி முதல் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்த உள்ளோம். 5 லட்சம் கையொப்பங்கள் பெற்று வருகின்ற ஜூலை 21ஆம் தேதி கையொப்பம் பெற்ற மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கமாக நடத்திட உள்ளோம்.
கோரிக்கைகள்
மருத்துவமனையின் தரத்தை உயர்த்த அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய முக்கிய கோரிக்கைகள்: மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும். அனைத்து மருந்துகளும் போதுமான அளவில் இருப்பில் வைக்க வேண்டும். சுகாதாரத்தை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு தீர்க்க அதிகமான போர்வேல்கள் அமைக்க வேண்டும். சிறப்பு மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும். வார்டு மேனேஜர் நியமனம் செய்ய வேண்டும். மகப்பேறு வார்டுகளில் படுக்கை வசதி அதிகரிக்க வேண்டும். பயிற்சி மாணவர்களுக்கு தனியான வசதிகள் வழங்க வேண்டும். லஞ்சம் மற்றும் முறைகேடுகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார்மயமாக்கல் முயற்சிகளை கைவிட வேண்டும். இவ்வாறு எஸ்.ஸ்ரீதர் தெரிவித்தார்.