tamilnadu

அரியலூர்,சீர்காழி மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

அரியலூரில் புதிய போக்குவரத்து கட்டுப்பாடு

அரியலூர், மே 9-அரியலூர் மாவட்டம் முழுவதும் வரும் 22-ம் தேதிபிற்பகல் 12 மணியில் இருந்து சிமெண்டு தொழிற்சாலை லாரிகள் இயங்க கூடாது என மாவட்ட எஸ்.பி.கூறியுள்ளார். இதுகுறித்து கடந்த புதனன்று பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் சிமெண்டு ஆலை லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட சாலை விபத்துகள் மற்றும் அதற்கான காரணம் பற்றி காணொலி மூலம் விளக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்தும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய இருவர் கைது

சீர்காழி, மே 9-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆலாலசுந்தரம் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பரணிதரன்(23). இவர் தனது டிராக்டர் மூலம் நாதல்படுகை பகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்தி சென்ற போதுகொள்ளிடம் காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி டிராக்டரை பறிமுதல் செய்து, பரணிதரனை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய டிராக்டர் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.இதே போல் சிதம்பரநாதபுரம் அரிச்சந்திரன்(50) என்பவர் கொன்னக்காட்டு படுகை கிராம கொள்ளிடம் ஆற்றிலிருந்து டயர் வண்டியில் அனுமதியின்றி மணல் ஏற்றிக் கொண்டு சென்ற போது டயர் வண்டியை பறிமுதல் செய்துஅரிச்சந்திரனை காவல்துறையினர் கைது செய்தனர். 


அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பெண் படுகாயம்

சீர்காழி, மே 9-கொள்ளிடம் அருகே அரசு கான்கிரீட் வீட்டு சுவர் இடிந்துவிழுந்ததில் பெண் படுகாயமடைந்தார். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம்ஊராட்சி வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (38), கூலித் தொழிலாளி. திருமணமாகாதவர். இவர் தனதுதாயுடன் அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார். கடந்தஒரு ஆண்டு முன்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் தென்னை கீற்றால் ஆன மேற்கூரையை அமைத்து குடியிருந்தார்.இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து தூங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி மீது விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து புதுப்பட்டினம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தஞ்சாவூரில் 95.85 சதவீதம் தேர்ச்சி

தஞ்சாவூர், மே 9- 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 95.85 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் 12,098 மாணவர்களும், 15,288 மாணவிகளும் என மொத்தம் 27,386 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 11,378 மாணவர்களும், 14,872 மாணவிகளும் என மொத்தம் 26,250 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 95.85 சதவீதம். இது, கடந்த ஆண்டை விட நிகழாண்டு 5.56 சதவீதம் அதிகம்.நிகழாண்டில் மாணவர்கள் 94.05 சதவீதம் பேரும்,மாணவிகள் 97.28 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் 3.23 சதவீதம் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மாநில அளவிலான தேர்ச்சி விகிதப் பட்டியலில் 21 ஆம் இடத்தில் இருந்த தஞ்சாவூர் மாவட்டம் நிகழாண்டு 17 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.மாவட்டத்தில் பார்வையற்ற மாணவர்களில் பிளஸ் 1 தேர்வு எழுதிய 36 பேரும், வாய் பேச இயலாதோரில் 26 பேரும் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்றனர். மேலும், மாற்றுத் திறனாளிகளில் 46 பேரில் 45 பேரும், இதர வகை மாற்றுத் திறனாளிகளில் 23 பேரில் 20 பேரும் தேர்ச்சி அடைந்தனர்.