திருச்சி,அக்.4- தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய திருச்சி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் பின்புற சுவரை உடைத்து முகமூடி அணிந்த நபர்கள் ரூ.13 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்தனர். கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருவாரூர் மடப்புரம் பாலம் அருகே வியாழனன்று இரவு காவல் சார்பு ஆய்வாளர் பாரதநேரு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 2 பேரை போலீசார் நிறுத்தினர். அப்போது அதில் ஒருவர் தப்பி ஓடினார். மற்றொருவரை பிடித்தனர். அவர் வைத்திருந்த அட்டை பெட்டிகளை போலீசார் சோதனையிட்ட போது அதில் நகைகள் சில இருந்தன. அந்த நகைகளில் லலிதா ஜூவல்லரி நகைக்கடையின் முத்திரைகள் இருந்தன. இதனால் அவர்கள் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர். அவரை திருவாரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். பிடிபட்ட நபர் திருவாரூர் மடப்புரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 32) என்பது தெரியவந்தது. தப்பியோடிய திருவாரூர் ஒட்டன்ரோடு சீராத்தோப்பைச் சேர்ந்த சுரேஷ் (28) என்பவரையும் போலீசார் பிடித்தனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய நபரான திருவாரூர் முருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.