தருமபுரி, ஜூன் 20- விவசாயிகள், மீனவர்கள், பழங்குடி, பட்டியலின மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட நெருப்பூர், ஏமனூர், சிங்காபுரம், அரக்காசனஅள்ளி ஊராட்சி, எர்ரப்பட்டி, தாசர்குந்தி உள்ளிட்ட பகுதிகளில் பல்லாண்டு காலம் வீடு கட்டி, வேளாண்மை செய்து வரும் விவசாயிகளை, வனத்துறையினர் நில வெளியேற்றம் செய்ய முயன்று வருகின்றனர். காவிரி முழவடை பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்வதை தடுத்து வருகின்றனர். சமீபத்தில் ஒகேனக்கல் அருகே மீனவர்கள் குடியிருப்பு வனத்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. பிக்கிலி, மலையூர், ஏரிமலை உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் மேய்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரியதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, புறம்போக்கு நிலங்களில் பல்லாண்டு காலம் குடியிருந்து வரும் விவசாயிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவும், நிலப்பட்டாவும் வழங்க வேண்டும். விவசாயிகளை நில வெளியேற்றம் செய்வதைக் கைவிட வேண்டும். மேட்டூரில் உள்ள மீனவர் கூட்டுறவு சங்கத்தைப் பிரித்து, ஏரியூரில் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் கிளையை தொடங்க வேண்டும். வனப்பகுதியில் கால்நடைகள் மேய்ப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். வன விலங்குகளால் வேளாண் பயிர்கள் சேதப்படுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த, வனத்தைச் சுற்றிலும் முள்கம்பி வேலிகள் அமைக்க வேண்டும். பயிர் பாதிப்புக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
பழங்குடி மற்றும் பட்டியலின மக்களுக்கு வீடு, குடிநீர், தெருவிளக்கு, சுடுகாடு, சுடுகாட்டுப் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். தாட்கோ, கூட்டுறவு கடனுதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணம் நடைபெற்றது. நெருப்பூரில் தொடங்கிய இப்பயணம் ஏரியூர், மூங்கில்மடுவு வழியாக பென்னாகரம் வந்தடைந்தது. இந்நிகழ்விற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாநிலக்குழு ஆர்.சிசுபாலன், மூத்த தலைவர் பி.இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோ.அருச்சுணன், வே.விசுவநாதன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து வட்டாட்சியர் (பொ) சண்முகசுந்தரத்திடம் மனு அளித்தனர்.