புதுதில்லி, ஜூலை 24 - தமிழகத்தில் குறிப்பாக மேற்கு மாவட்டங் களில் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம், கெயில் எரிவாயு குழாய் மற்றும் பெட்ரோலிய குழாய் கொண்டு செல்லும் திட்டங்களை எதிர்த்து பாதிக்கப்பட்ட விவசாயி கள் கூட்டமைப்பினர் தில்லியில் இரு நாள் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்துக்கு ஆந்திரா, தில்லி, உ.பி., பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நேரில் வருகை தந்து ஆதரவு தெரிவித்தனர். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். அதேபோல் விளைநிலங்கள் வழியாக குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் கெயில் திட்டத்தையும், கோவை அருகே இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே தேவனஹட்டி வரை குழாய் மூலம் பெட்ரோலியம் கொண்டு செல்லும் ஐடிபிஎல் திட்டத்தையும் எதிர்த்துப் போராடி வருகின்றனர். எனினும் மத்திய அரசு சார்பு நிறுவனங்களின் இத்திட்டங்களை நிறைவேற்றுவதில் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலையில், இதை எதிர்த்துப் போராடினால் மாநிலத்தை ஆளும் எடப்பாடி அரசு செவி சாய்க்க மறுப்பதுடன், அடக்குமுறையை ஏவிவிட்டு கண்மூடித்தனமாக நடந்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஜூலை 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் தில்லியில் மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டனர். அதன்படி உயர்மின் கோபுரம், கெயில், பெட்ரோலிய திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் வழக்கறிஞர் ஈசன், கி.வே.பொன்னையன், ஏ.எம்.முனுசாமி, முத்து விஸ்வநாதன், சண்முகசுந்தரம், பார்த்தசாரதி, தமிழ் ராஜேந்திரன், சுரேஷ், பெருமாள், ஆர்.குமார், ராமமூர்த்தி, பலராமன், கரூரான், கெயில் எதிர்ப்பு கூட்டமைப்பு கோபால், பெட்ரோலிய திட்ட குழாய் எதிர்ப்பு கூட்ட மைப்பு வெங்கடாசலம், தூரன் நம்பி உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் ஏராளமான விவசாயிகள் தில்லியில் செவ்வாயன்று போராட்டத்தைத் தொடங்கினர்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் இந்திய தந்திச் சட்டத்தையும், 1963ஆம் ஆண்டின் பெட்ரோலியம், மினரல் குழாய் திட்டங்களுக் கான சட்ட விதிமுறையையும் திருத்தம் செய்ய வேண்டும், உயர் மின் கோபுரங்களை புதை வடங்களாகவும், எரிவாயு, பெட்ரோலியம் ஆகிய வற்றை குழாய் மூலமும் சாலையோரம் கொண்டு செல்லும் திட்டமாக மாற்றி நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, பொருளாளர் பி.கிருஷ்ணபிரசாத், இணைச் செயலாளர் விஜு கிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். அதேபோல் தமிழக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி எம்.பி.க்கள் கோவை பி.ஆர்.நடராஜன், திருப்பூர் கே.சுப்பராயன், ஈரோடு கணேசமூர்த்தி, பொள்ளாச்சி சண்முகசுந்தரம், கரூர் ஜோதிமணி, நாமக்கல் சின்ராஜ் உள்ளிட்டோர் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து வாழ்த்துத் தெரி வித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் தலை வர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் ஆகியோரும் இப்போராட்ட த்திற்கு நேரில் வந்து வாழ்த்துத் தெரிவித்தனர். அத்துடன் பிரதமர் மோடி, மத்திய மின்சாரம் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர்கள் ஆகியோரை விவசாயப் பிரதிநிதிகள் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி கோரிக்கைகளைக் கேட்டறிந்து பிரச்சனைக்குத் தீர்வு காணவும் தமிழக எம்பிக்கள் வலியுறுத்தினர்.
தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் விளைநிலங்கள் வழியாக குழாய் மற்றும் உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகள் அமைப்பின் நிர்வாகிகள் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் தில்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநி லங்களைச் சேர்ந்த விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் தமிழக விவசாயிகள் போராட்ட த்துக்கு ஆதரவு தெரிவித்தனர். வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் வட மாநிலங்களிலும் இதுபோல் விவசாய விளைநிலங்களை பாதிக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருவதாகவும், இதை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் வட மாநில விவசாய அமைப்பினர் தெரிவித்து தமிழக விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இப்போராட்ட நடவடிக்கைகளுக்கும், ஏற்பாடுகளுக்கும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் தேவையான உதவிகளை செய் திருந்தது குறிப்பிடத்தக்கது.