tamilnadu

img

பொய்களைக் கட்டமைத்தல் -வே.தூயவன்

வாட்ஸ் ஆப் எனும் சமூக ஊடகம் ஒரு குழுவாக விவாதிப்பதற்கான வாய்ப்பைத் தருகிறது. ஆனால் இதை ஓர் அறிவுத்தளமாகப் பயன்படுத்தி ஆழமாக விவாதிக்கும் வாய்ப்பை நிராகரித்து விட்டு, மேம்போக்கானதாக, சிந்தனைக்கும், நடைமுறைக்கும் கொஞ்சமும் பொருத்தமில்லாத விவாதங்களை முன்வைத்து தங்கள் நம்பிக்கையை அவசரகதியில் கடத்த வேண்டும் என்று திணிக்கக்கூடியவையாக பெரும்பாலான கருத்துகள் பரப்பப்படுகின்றன. இன்னும் சொல்லப் போனால் இப்படி அனுப்பப்படும் பெரும்பாலான பதிவுகள், மீம்ஸ்கள் யாரோ உருவாக்கி முன்அனுப்பக் கூடியவையாக இருக்கின்றன. விவாதிக்கக்கூடிய விசயங்களில் மீம்ஸ்களையோ, முன்அனுப்புவதையோ (ஃபார்வர்ட் மெசேஜ்) செய்யக் கூடாது என்பதல்ல, ஆனால் அவை குறைந்தபட்ச உண்மை, சமூக எதார்த்தத்திற்கு பொருந்தக் கூடியதாக இருந்தால் நல்லது. அப்படி இல்லாமல் பொய்யை உண்மை போன்ற மயக்கம் ஏற்படுத்தி அனுப்புவது  வெள்ளம் போல் குவிக்கப்படுகிறது. “ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மை என்ற நம்பிக்கையைப் பெற்று விடும்” எனும் “கோயபல்ஸ் பாணி” பிரச்சாரத்தை திறமையாக மேற்கொள்ளும் களமாக இப்போது வாட்ஸ் ஆப் சமூக ஊடகம் பயன்படுத்தப்படு கிறது என்பதே கவலைதரும் உண்மையாக உள்ளது. அதற்குப் பலர் இரையாகிக் கொண்டிருக்கின்றனர் என்பதைக் காணும்போது பொய்யின் வலிமையைக் குறைத்து மதிப்பிடுவதற்கு இல்லை எனத் தோன்றுகிறது.

இந்த பொய்களைப் பற்றி அறிவார்ந்த கேள்விகளை எழுப்பினால், அதற்கும் யாரோ, எங்கேயோ கட்டமைத்த பதில்களை, அவை பெரும்பாலும் பதில்களாக இருப்பதில்லை, கேள்வி எழுப்பக்கூடியவர்களை அடையாளப்படுத்தி தாக்குதல் நடத்துபவையாக மட்டுமே இருக்கின்றன. இப்படிச் செய்வதன் மூலம் விமர்சனப்பூர்வமான விவாதத்தின் கதவைச் சாத்தி விடுகிறார்கள். அர்த்தப்பூர்வமாக விவாதிக்காதபோது அது வெறும் வாய்ச் சவடால், தெருச் சண்டையாக, தனிப்பட்ட தாக்குதலாக குரூர உற்சாகத்துடன் நடத்தப்படுகிறது. இது சமூக உண்மைகளைப் புரிந்து கொள்வது, அதற்காகத் தொடர்ந்து முயற்சிப்பது என்பதற்கு நேர் எதிராக அந்த குழுவுக்குள் விவாதிப்போரை முத்திரை குத்தி பிளவு ஏற்படுத்தக் கூடியதாக மாற்றப்படுகிறது. எந்தவொரு கருத்து நிலையில் நின்று பேசும்போதும் அது எல்லோருக்கும் உவப்பானதாக இருக்காது, அது பலரது நம்பிக்கையைக் கேள்விக்கு உட்படுத்தும், எனவே யாருடைய மனமும் புண்படாமல் விவாதிப்பது முழுமையாகச் சாத்தியமில்லை. ஆனால் அப்படி விவாதிக்கும்போது நிகழ்காலம் பற்றி நாம் எப்படிப் பார்க்கிறோம், எதிர்காலத்தைப் பற்றி நாம் என்ன மாதிரியான கற்பிதம் கொள்கிறோம் என்ற புரிதல் மிகவும் அவசியம். அதெல்லாம் இல்லாமல் நடத்தப்படும் வாட்ஸ் ஆப் குழு விவாதங்கள் பலரை சிந்தனையற்றவர்களாக மாற்றி விழுங்கிக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக ஆர்எஸ்எஸ் காவிக் கூட்டத்தின் பிரச்சார உத்தி இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும், எஸ் வங்கி முறைகேட்டுச் சிக்கலாக இருந்தாலும், இந்தியாவின் பொருளாதாரத்தின் உண்மை நிலை பற்றிய விவாதமாக இருந்தாலும் எல்லாவற்றிலும் ஒற்றை நிலை, மோடி அரசை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு அப்பட்டமாகத் தூக்கிப் பிடிப்பது திணிக்கப்படுகிறது. விமர்சனம், கேள்வியை எழுப்புவோருக்கு தயார் நிலையில் திசை திருப்பும் ஏதோ பழைய குப்பைக் கூளங்களை அள்ளித் தெளித்து விடுகின்றனர். அதையும் தாண்டி யாரேனும் தொடர்ந்து விவாதித்தால் அவர்களைத் தனிப்பட்ட அடையாளப்படுத்தி “இன்னார்” என முத்திரை குத்தி அவர்களது கருத்துகளை பின்னுக்குத் தள்ள முயற்சிக்கின்றனர். இந்துத்துவம் என்ற வெறி பிடித்த சமூக அரசியல் சித்தாந்தம், தனது வாதத்துக்கு இந்து மத வாழ்வியலின் பண்பியல்புகளைக் கேடயமாக்கிக் கொள்கிறது. இதை நுட்பமாகப் புரிந்து கொள்ள முடியாத சாமானிய இந்து மத நம்பிக்கையாளர்கள் தங்களையும் அறியாமல் இந்துத்துவத்தை ஆதரித்துப் பேசுகின்றனர். இப்படி ஒரு குழுவுக்குள் இந்துத்துவ ஆதரவு கருத்து நிலையைத் திணிக்கும்போது, அதன் எதிர்நிலையில், சிறுபான்மை சமூகத்தினர் மனரீதியாகப் பிளவுபடுகின்றனர். சரியாகச் சொல்வதென்றால் பிளவுபடுத்தப்படுகின்றனர். ஆக அங்கே ஜனநாயகரீதியாக, விமர்சனப்பூர்வமாக சரியான கருத்தை நோக்கி அந்த குழுவில் உள்ளோர் ஒன்றுபடுவதற்கு எதிர்மாறாக பிளவுபடுத்துதல் நுட்பமாக நடைபெறுகிறது. “நாம், அவர்கள்” என இரு கூறாக பொதுப்புத்தியில் பிளவு ஏற்படுகிறது. இப்படி பொதுப்புத்தி பொய்களால் கட்டமைக்கப்படுகிறது.

ஒரு குழுவுக்குள் நடைபெறும் இதுபோன்ற பொய்க் கட்டமைப்பு ஒவ்வொரு குழுவுக்குள்ளும் நடைபெறுகிறது. உள்ளூர் மட்டத்தில் தொடங்கி ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும், ஒவ்வொரு மாநிலத்திலும், ஆக நாடு முழுமைக்கும் இதுபோன்ற விவாதங்கள் சிலந்தி வலைப்பின்னலாக கட்டமைக்கப்பட்டு தீவிரமாக பொய்கள் மூலம் பிளவுகள் கூர்மைப்படுத்தப்படுகின்றன. வடகிழக்கு தில்லியில் நன்கு திட்டமிட்டு மூன்று நாட்கள் கட்டமைக்கப்பட்ட வன்முறை வெறியாட்டம் பற்றி முழுமையான உண்மைத் தகவல்களை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, ஏற்கெனவே மதரீதியாக பிளவுபடுத்தப்பட்ட மனங்கள் அதை ஏதோ ஒரு சார்பு நிலையில் நின்று பேசுவதற்குத் தயாராக இருக்கின்றன. அப்படி இல்லாவிட்டால் கூட, குறைந்தபட்ச மனிதாபிமான உணர்வு இல்லாமல், “அங்கே ஏதோ கலவரம், சிலர் செத்துப் போனார்கள்” என இயல்பாக கடந்து போகும் நிலையில் பொதுப்புத்தி கடந்து போகிறது. கொல்லப்பட்டார்கள் என்பதற்கும், செத்துப் போனார்கள் என்பதற்குமான வித்தியாசம் கூட இல்லாமல் போகிறது. அங்கே கொலையுண்டவர்கள் முஸ்லிமாகவோ, இந்துவாகவோ இருக்கலாம், மொத்தத்தில் அவர்கள் மனிதர்கள், சாமானியர்கள். அவர்களை இழந்து வாடும் எத்தனை குடும்பங்களின் கதி என்னவாகிப் போயிருக்கும் என்பதான கேள்விகள் எதுவுமற்று மரத்துப் போகிறது. ஏன் அங்கே வன்முறை நடைபெற்றது? தில்லி தேர்தல் முடிவுகள் வெளியாகி சில வாரங்களில், அதுவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின்போது எப்படி இந்த வன்முறை தொடங்கப்பட்டது? இதன் பின்னணி என்ன? தில்லி தேர்தல் பிரச்சாரத்தில் வெறியூட்டி, “துப்பாக்கியால் துரோகிகளைச் சுட்டு வீழ்த்துவோம்!” என முழக்கம் எழுப்பப்பட்டதே? அங்கே இருதரப்பு கலவரமாக நடந்ததா? திட்டமிடப்பட்ட வன்முறை படுகொலை வெறியாட்டமாக நடத்தப்பட்டதா? இவையெல்லாம் குறைந்தபட்சம் சிந்திக்கக்கூடிய கேள்விகளாக வரவில்லை. மாறாக ஒருதரப்பாக, காவல் துறையினரை நோக்கி இஸ்லாமிய இளைஞர் ஒருவர் துப்பாக்கியை நீட்டிய ஒற்றைப் படம் வாட்ஸ் ஆப் சமூகக் குழுவில் காவிகளின் சார்பு நிலையில், இச்சம்பவத்தை அனுமானித்துக் கொள்ள போதுமானதாக இருந்தது! இதைச் சுட்டிக்காட்டினால் இஸ்லாம் பயங்கரவாதிக்கு ஆதரவளிக்கின்றனர் என்றும் பழிபோடுவார்கள், அதுதானே அவர்களுக்குத் தேவை! சமூகத்தின் இதர பிரிவினர் நடத்தும் ஜனநாயகப் போராட்டங்களை தேச விரோத வன்முறையாகவும், சமூக ஒற்றுமையைச் சீர்குலைப்பதாகவும், வெறிபிடித்தக் காவிக் கூட்டம் நடத்தும் ரத்தக் காட்டேரி வன்முறைகளை தேசபக்தப் போராட்டமாகவும் தலைகீழாக மாற்றிக் காட்டி சித்தரிப்பது எனும் கொடூரத்தை, சமூக ஊடகக் குழுவில் ஆர்எஸ்எஸ் கும்பல் கச்சிதமாக அரங்கேற்றி வருகிறது. மகத்தான இந்தியா பற்றி குறைந்தபட்ச புரிதல் இல்லாத, வரலாற்று ஞானமோ, வரலாற்று உணர்வோ இல்லாத, மத்திய தர வர்க்கப் பொதுப்புத்தி இதற்கு எளிதாக இரையாகி வருகிறது. உண்மையைத் தேடும் சமூகப் பொறுப்புள்ள ஊடகத்தினரையும் இது விட்டுவைக்கவில்லை.