tamilnadu

தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

ஆற்று நீரில் மூழ்கி  வாலிபர் பலி
தஞ்சாவூர், அக்.19- நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த நல்லூர் தெற்குத் தெரு பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் முருகவேல்( வயது31). இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் தனது நண்பர்களான ராமநாதபுரம் மணிராஜ் மகன் கருப்பசாமி மற்றும் திருவாரூர் சந்திரசேகர் மகன் விஜயகுமாருடன் சேர்ந்து, பேராவூரணி அருகே கொன்றைக்காடு மெயின் ரோட்டில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றனர். மூவரும் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முருகவேல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு 1 மணி நேரத்திற்கு பிறகு தீயணைப்பு மீட்புப்படையினரால் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர். 

அரசு சுவர்களில் விளம்பரம் செய்ய தடை
தஞ்சாவூர், அக்.19- தஞ்சாவூர் மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு கட்டிடங்களின் சுவர்களில், கும்பகோணம் அரசு கவின் கல்லூரி மாணவர்களால் பழமை வாய்ந்த, நிகழ்வுகள் வண்ண ஓவியங்களாக தீட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.  எனவே தஞ்சை மாநகர் பகுதியில், அண்ணா சாலை முதல் சோழன் சிலை வரையுள்ள அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை சுற்றுச் சுவர்களில் தனியார் நிறுவனங்கள் விளம்பரம் ஏதும் செய்யக் கூடாது. மீறி விளம்பரம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்துள்ளார். 

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை
பெரம்பலூர், அக்.19-தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மாவடுகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அறிவழகன்(38). இவருக்கும், பெரம்பலூரைச் சேர்ந்த அழகிரி என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 6.2.2016 அன்று அறிவழகன், பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் கோனேரிப்பாளையம் செல்லும் வழியில் உள்ள தனியார் பெட்ரோல் அருகே முள்புதரில் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார். முன்விரோதம் காரணமாக அறிவழகனை கடத்தி கொலை செய்ததாகக் கூறி அழகிரி(37), பெரம்பலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணையை தொடர்ந்து குற்றவாளி அழகிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி மலர்விழி தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.