கும்பகோணம், ஆக.17- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது. திருவிடைமருதூர் தாலுகாவில் பல ஆண்டுகளாக நீதிமன்றம் தொடக்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றம், திருவிடைமருதூரில் நீதிமன்றம் தொடங்க உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக திருவிடைமருதூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழைய கட்டிடத்தில் சீரமைக்கப்பட்டு அதில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதனன்று மாலை தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம் புதிய நீதிமன்றத்தை திறந்து வைத்தார். நீதிபதிகள் பெஞ்சமின் ஜோசப், மாதவன், ராமானுஜம், பாலசுப்ரமணியன், நிலவரசன், விஜயகுமார், பாலமுருகன், கீதாஞ்சலி, ஆட்சியர் அண்ணாதுரை, காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன், வட்டாட்சியர் சிவக்குமார், வழக்கறிஞர் சங்கத் தலைவர் லோகநாதன் செயலாளர் தரணிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நீதிபதி சிவஞானம் பேசுகையில், பேராவூரணி தாலுகாவிலும் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைமை இடம் என தஞ்சையில் குடும்ப நீதிமன்றம் கூடுதல் மாவட்ட முன்சீப் கோர்ட் மகிளா கோர்ட் ஆகியவையும் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார். தொடர்ந்து திருவிடைமருதூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவராக நியமிக்கப்பட்டுள்ள நில வரசன் நீதிமன்ற நடுவர் இருக்கையில் அமர்ந்து பணியைத் தொடங்கினார்.