கும்பகோணம், மார்ச் 21- தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் செயல் அலுவலர் வி.சிவலிங்கம் கும்பகோணம் சாலை, கடைவீதி ஆகிய வணிகப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது உணவகங்கள் மற்றும் ஒயின் ஷாப் அருகில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்தார். உடனடியாக அப்பகுதியில் உள்ள உணவகங்கள், பழக்கடைகள் ஒயின் ஷாப்புக்கு அருகில் உள்ள கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் டம்ளர்கள் சப்ளை செய்யும் மளிகை கடை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு 45 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்ததுடன் ரூ 17,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் கடைகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடைகள் சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்தார். ஆய்வின் போது இளநிலை உதவியாளர் தயாள ராஜகோபாலன் மின் பணியாளர் செந்தில்குமார் துப்புரவு மேற்பார்வையாளர் பரசுராமன் ஆகியோர் உடனிருந்தனர்.