கும்பகோணம், ஜூலை 18- பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் வியாழக்கிழமை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதே போல் அரசு மருத்துவர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் காலை 9.30 மணி வரை 2 மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இக்கூட்டமைப்பின் மாவட்ட பொருளாளர் டாக்டர் அருளீஸ்வரன் தலைமை வகித்து போராட்டத்தை விளக்கி பேசினார். பட்ட மேற்படிப்பு அரசு மருத்துவர் சங்க செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். மத்திய, மாநில அரசுகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதியடைந்தனர்.