சேலத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இளம்பிள்ளை நகரம். இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஜவுளி நகரங்களில் ஒன்று. இளம்பிள்ளையை சுற்றியுள்ள இடங்கணசாலை, பெருமாகவுண்டம்பட்டி, கே.கே.நகர் வேம்படிதாளம் சித்தர் கோவில், மகுடஞ்சாவடி, ஆட்டையாம்பட்டி, தாரமங்கலம், நடுவனேரி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் வனவாசி அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏழைகளின் குடிசை தொழிலாக ஜவுளி உற்பத்தியே இருந்து வருகிறது. கால மாற்றத்திற்கு ஏற்ப மக்களின் ரசனைகளை உள்வாங்கி பல்வேறு வண்ணங்களிலும், வடிவங்களிலும் பிரத்யேகமாக கண்கவரும் புத்தம் புதிய டிசைன்களில் புடவைகள் தயாராகி வருகிறது. எம்போஸ் சேலைகள், ஆல் செல்ஸ் சேலைகள், காட்டன் சேலைகள், கோட்டா காட்டன் எம்போஸ் சுடிதார் ரகங்களும் உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நெய்யப்படும் புடவைகள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே அதிகம் ஜிஎஸ்டி செலுத்தும் பேரூராட்சிகளில் இளம்பிள்ளை பேரூராட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேலை உற்பத்தியாளர்கள் உள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளது, நாளொன்றுக்கு 5 கோடி மதிப்பில் சேலைகள் உற்பத்தியாகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், ஆடி பண்டிகை உள்ளிட்ட விழா காலங்களில் இப்பகுதி சேலைகளுக்கு என குறிப்பிடத்தக்க அளவில் அதிகமான வாடிக்கயைளர்கள் வந்து விரும்பி வாங்கி செல்வர்.
தீபாவளி பண்டிகையின் பொழுது பெரும்பாலான பெண்கள் சிந்தடிக் சேலையை விரும்புவதில்லை விழா காலம் கனியும் போது காட்டன் சேலைகள் உடுத்துவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சேலைகளை உடுத்திக்கொண்டு கோவில் திருமணம் உள்பட பல்வேறு விழாக்களுக்கு செல்லலாம். பட்டு சேலை விலையும் அதிகம், உடுத்தினால் அதை டிரை வாஷ் செய்ய வேண்டும். ஆனால் இளம்பிள்ளையில் உற்பத்தியாகும் செயற்கை பட்டுகளான எம்போஸ் ஆல் செல் போன்ற சேலைகளை உடுத்தினால் வீட்டிலேயே எளிய முறையில் துவைத்து காய வைத்துக்கு கொள்ள முடியும். இதனாலேயே பெரும்பாலான பெண்கள் இளம்பிள்ளை புடவை களை விரும்புகின்றனர். தரத்திற்கு ஏற்ப ஒரு சேலை 350 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 5 ஆயிரம் வரை ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பெண்கள் இந்த ரக சேலைகள் வாங்குவதை விரும்புகின்றனர் . திருமண வீட்டில் உறவினர்களுக்கு பட்டு சேலைக்கு பதில் எம்போஸ் சேலைகளை கொடுக்கின்றனர் இதனால் செலவும் மிச்சமாகிறது குறைந்த விலையில் வண்ணமயமான சேலை அவரவருக்கு பிடித்த கலர்களிலும் டிசைன்களிலும் கிடைக்கிறது தேவை கட்டமைப்பு இளம்பிள்ளை பகுதிகளில் சிறப் புகள் ஏராளம். ஆனால், ஏற்றம் பெறாத ஜவுளி நகரமாக திகழ்கிறது. குறைந்த விலையில் உயர்தரத்தில் தயாராகும் ஜவுளிகள் மொத்தமாக வும், சில்லரையாகவும் வாங்கிச் செல்ல வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள், ஏஜெண்டுகள் வருகின்றனர். ஆனால் அவர்கள் உள்ளூரில் தங்குவதற்கான வசதிகள் எதுவும் இல்லை. விழாக்காலங்களில் அதிகளவில் புடவைகள் வாங்க வரும் பெண்களுக்கு போதிய வசதியுடன் உரிய கழிப்பிடங்கள் கூட இல்லாத நிலையே தொடர்கிறது. அதேபோல், சேலம் புதிய பேருந்து நிலையம், சேலம் ரயில்வே ஜங்ஷன் பகுதியிலிருந்து இளம்பிள்ளை வந்தடைய போதிய பேருந்து வசதிகள் இல்லாத நிலையும் நீடிக்கிறது. லட்சக்கணக்கான மதிப்புள்ள சரக்குகளை பாதுகாப்பு இல்லாமல் தனியார் பார்சல் சர்வீஸை மட்டுமே நம்பி அனுப்பி வருகின்றனர். இளம்பிள்ளை அருகே உள்ள வேம்படிதாளம் ரயில் நிலையத்தை மூடியதும் இந்த அவலநிலைக்கு ஒரு காரணமே. முதல்வர் மாவட்டத்தில் முக்கிய தொழிலாக இருந்து வரும் இளம்பிள்ளை ஜவுளித்தொழிலை பாதுகாக்க முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி கட்டமைப்பை மேம்படுத்திட வேண்டும் என்பதே இப்பகுதி உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
தொழிலாளர் நலன் இங்குள்ள 60 வயது முதிர்ந்த நெசவாளர்களுக்கு மாதம்தோறும் அரசு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கி வருகிறது. இதை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தரவேண்டும். விபத்து மரணத்திற்கு ஒரு லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதனை 5 லட்சமாக உயர்த்த வேண்டும். நெசவாளர்களும் குழந்தைகளுக்கு தற்போது வழங்கும் கல்வி உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்த வேண்டும். கொரோனா வைரஸ் பரவுவது குறித்து ஊரடங்கு உத்தரவால் விசைத்தறி கூலி தொழிலாளர்களுக்கு கூலி குறைப்பு 100 க்கு 20% சதவீதம் முதல் குறைக்கப்பட்டுள்ளது.இதனை மீண்டும் உயர்த்தி வழங்க கோரிக்கை வலுத்து வருகிறது. இளம்பிள்ளையில் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தி வரும் மலிவு விலை உணவகம் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைள் நிறைவேற்றப்படுமானால், தொழிலையும், தொழிலாளர்களையும் ஒரு சேர பாதுகாத்திட முடியும். இளம்பிள்ளை பகுதியை மையமாக கொண்டு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையையும் நிறைவேற்றிட வேண்டும். தியாகு, இளம்பிள்ளை