சேலத்தில் அதிமுக எம்.எல்.ஏ விற்கும், விவசாயிக்கும் நிலத்தில் வேலி அமைப்பதில் நடத்த வாக்குவாதம் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறதில். இதில், எம்எல்ஏ என்றும் தெரிந்தும் வெளுத்து வாங்கிய முதியவரை இணையத்தில் பாராட்டி வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ இருப்பவர் சின்னத்தம்பி. இவர் ராமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர். விளைநிலத்தில் வெளி அமைக்கும் விவகாரத்தில் பக்கத்து தோட்டத்தில் இருந்த விவசாயியுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.தனது வயல்காட்டிற்கு செல்லும் பாதையை அடைத்து பக்கத்து தோட்டக்காரர் வேலி அமைக்கிறார் என்பது சின்னதம்பி எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டாக இருந்துள்ளது.
சின்னத்தம்பி எம்எல்ஏ தனது தோட்டத்துக்கு சென்ற போது பாதை அடைக்கப்பட்டு கல் நடப்பட்டிருந்ததை கண்டு கோபம் அடைந்துள்ளார். உடனடியாக இது குறித்து பக்கத்து தோட்டத்து விவசாயியிடம் கேட்டுள்ளார். அவர் அளித்த பதிலைக் கேட்டு ஆவேசமடைந்த சின்னதம்பி ஆபாச வார்த்தைகளில் விவசாயியை திட்டியுள்ளார். மேலும், காவல்துறையினருக்கு போன் போட்டுள்ளதாகவும் இப்போது வந்து உன்னை என்ன செய்யப் போகிறார்கள் பார் எனவும் கூக்குரலிட்டார். இதனை பார்த்த விவசாயி, உன்னால் என்னை என்ன செய்ய முடியும் எனக் கேள்வி எழுப்பியதோடு அரசியலுக்கு போவதற்கு முன் உன்னிடம் நல்ல டவுசர் கூட இருந்ததில்லை, இப்போது வந்து என்னிடம் பேசுகிறாயா என கூலாக விமர்சித்தார்.
இதனை படம் பிடித்த ஒருவரை நோக்கி, கடப்பாறை எடுத்துக்கொண்டு வருகிறேன், அப்ப படம் புடி என மிரட்டியதோடு அங்கு வேடிக்கை பார்த்தவர்களையும் விரட்டியடித்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் கூட இல்லாத நிலையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.