tamilnadu

வேலூர் மற்றும் திருநெல்வேலி முக்கிய செய்திகள்

நவீன பீரங்கி தயாரிப்பு

அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தகவல்

வேலூர், மே 20-இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் நவீன பீரங்கி இந்தியாவிலேயே உருவாக்கப்படும் என சென்னை, ஆவடியில் செயல்படும் போர் வாகன ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.பாலமுருகன் தெரிவித்தார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டிஆர்டிஓ) கீழ் இந்த நிறுவனம் செயல்படுகிறது. அதன் இயக்குநரான வி.பாலமுருகன், அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டங் களை வழங்க வந்திருந்தார். விழாவுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-எங்களது நிறுவனத்தின் மிகப்பெரிய சாதனை தயாரிப்புதான் அர்ஜூன் பீரங்கிகள். இந்த பீரங்கிகள் உலகத்தின் அனைத்து நாடுகளும் வியந்து பார்க்கும் அளவிற்கு பல்வேறு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2000-ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்திற்கு அர்ஜூன் பீரங்கி உருவாக்கி காட்டப்பட்ட நிலையில் அப்போதைய இந்திய ராணுவம் அளித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2010-இல் இந்த பீரங்கிகள் தயாரித்து அளிக்கப்பட்டன. அதன்பின், அர்ஜூன் பீரங்கியில் 14 அம்சங்களைப் புகுத்தி அர்ஜூன் மார்க்-1 என்ற பெயரில் புதிய பீரங்கி தயாரிக்கப்பட்டு அதுவும் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. தற்போது அதிலும் ஒருபடி மேலே சென்று 58 அம்சங் கள் மாற்றப்பட்ட நிலையில் அர்ஜூன் ஆல்ஃபா ரக பீரங்கி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பீரங்கிகளைக் கொள்முதல் செய்ய இந்திய ராணுவம் தற்போதுதான் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது. எங்களது நிறுவனம் தயாரிப்பு நிறுவனம் அல்ல. வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்பதால் பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இவற்றை உருவாக்குகிறோம். அடுத்த 3 ஆண்டுகளில் அவை இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.தற்போது ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பீரங்கிக்கான அனைத்து பாகங்களையும் நம் நாட்டிலேயே தயாரிக்கும் அளவிற்கு புதிய ஆராய்ச்சிகளை மேற் கொண்டு உள்ளோம். புதிய பீரங்கி அனைத்து உலக நாடுகளும் இந்தியாவை ஏறெடுத்துப் பார்க்கும் நிலையை ஏற்படுத்தும். அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் இந்த பீரங்கி உருவாக்கப்படும்.இவ்வாறு வி.பாலமுருகன் கூறினார்.முன்னதாக நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வர் விஜயகுமார் வரவேற்றார். விழாவில் 104 மாணவர்களுக்கு பட்டங்களை இந்திய போர் வாகன ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன இயக்குநர் வி.பாலமுருகன் வழங்கினார். விழாவில் கல்விக்குழுமச் செயலர் டி.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் கே.சாம்பமூர்த்தி, மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், மேலாளர் குமார் மற்றும் போர் வாகன ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன துணை இயக்குநர் கே.அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து

திருநெல்வேலி, மே 20-தென்காசி, குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் மிகுதியாக இருந் தது. வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சனிக்கிழமைமாலையில் தென்காசி, குற்றாலம்மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இரவு 8 மணி வரை மழைநீடித்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் மிக மெதுவாகச் சென்றன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பரிதவித்தனர்.குற்றாலம் மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் விழத் துவங்கியது. ஞாயிறு காலையில் மெயின் அருவியில் விழுந்த தண்ணீரில் சுற்றுலாப்பயணிகள் போட்டி போட்டுக் கொண்டுகுளித்து மகிழ்ந்தனர். பகலில் வெப்பம்மிகுதியாக இருந்ததால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் நின்று குளித்தனர். தொடர்ந்து மழை பெய்தால் அருவிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும். இல்லையேல் ஓரிரு நாட்களில் அருவிகளில் தண்ணீர் வரத்து நின்று விடும்.