tamilnadu

தாம்பரத்திலிருந்து மங்களூருக்கு வாரம் இரு முறை ஏசி சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை, ஜூன் 6- சென்னை தாம்பரம் - மங்களூரு  இடையே வாரம் இரு முறை குளிர் சாதன வசதியுடன் கூடிய சிறப்பு ரயில், இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் மிக முக்கிய  போக்குவரத்தாக ரயில் போக்கு வரத்து உள்ளது.

லட்சக்கணக்கானோர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். குறைந்த கட்டணம் மற்றும் சௌ கரியம் காரணமாக பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதை விரும்புகின்றனர். பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதும் உண்டு. மேலும் இவை குறிப்பிட்ட காலம் வரை நீட்டிப்பு செய்வதும் வழக்கம்.  ரயில் போக்குவரத்தில் பல வசதி களும் செய்யப்பட்டு வருகின்றன. கோடை விடுமுறைக்கு பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது விடுமுறை முடிய உள்ள நிலையில், ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை தாம்பரம் - மங்களூரு இடையே வாரம் இரு முறை குளிர் சாதன வசதியுடன் கூடிய சிறப்பு ரயில்,  இரு மார்க்கத்திலும் ஜூன் 7ஆம் தேதி  முதல் இயக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த ரயில் சேலம், ஈரோடு  வழியாக இயக்கப்படுகிறது. தாம்பரம் - மங்களூரு சிறப்பு ரயில்  (எண்.06047), வரும் 7ஆம் தேதி  முதல் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் 1.55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். இந்த  ரயில் சேலம் இரவு 7.47 மணி, ஈரோடு இரவு 8.45 மணி, திருப்பூர் இரவு 9.33 மணி, போத்தனூர் இரவு 10.38 மணி என வந்தடைந்து, மங்களூரு ரயில் நிலையத்தை மறுநாள் காலை 6.55 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் வரும் ஜூன் 30 வரை இயக்கப்படும்.

அதேபோல் மறுமார்க்கத்தில், மங்களூருவில் இருந்து, மங்களூரு - தாம்பரம் சிறப்பு ரயில் (எண்.06048), வரும் 8ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனி மற்றும் திங்கட்கிழமைகளில் மதியம் 12 மணிக்குப் புறப்படும். போத்தனூர் மாலை 6.58 மணி, திருப்பூர் இரவு 7.43 மணி, ஈரோடு இரவு 9.05 மணி, சேலம் இரவு 10.07  மணி என வந்தடைந்து, தாம்பரம் ரயில்  நிலையத்தை மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு வந்தடையும். இந்த ரயில்  ஜூலை 1 வரை இயக்கப்படும்.  எழும்பூர்,  பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு,  திருப்பூர், போத்தனூர், பாலக்காடு,  ஒட்டப்பாலம், சொர்னூர், திரூர், கோழிக் கோடு, வடகரா, தலசேரி, கண்ணூர், பையனூர், காசர்கோடு ஆகிய  ரயில் நிறுத்தங்களில் இந்த சிறப்பு ரயில்கள் நின்று செல்லும்.

;