சாலைப் பணிகளை முடிக்காமல் சுங்கக் கட்டணம் வசூலிப்பு
துச்சேரி,மார்ச் 3- விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை 179.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழி சாலை ரூ.6,431 கோடி செலவில் ஒன்றிய அரசு அமைத்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் ஜானகிபுரத்தில் துவங்கிய சாலை, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 134 கிராமங்கள் இணைத்தப்படியாக செல்கிறது. இந் நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. ஆனால், அதற்குள்ளாக சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளது. இதில் முதல் கட்டமாக, விழுப்புரம் முதல் எம்.என் குப்பம் வரை இரண்டு சிறு பாலங்கள், 14 மேம்பாலங்கள் ரூ.1,400 கோடி மதிப்பிலும், இரண்டாம் கட்டமாக எம்.என். குப்பத்தில் இருந்து கடலூர் பூண்டியான் குப்பம் வரை 10 சிறு பாலங்கள் மற்றும் ஆற்றின் குறுக்கே மூன்று பெரிய பாலங்கள், 18 மேம்பாலங்களுடன் ரூ.600 கோடி மதிப்பிலான பணிகளை திலீப் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தார் ஒப்பந்தம் எடுத்து பணிகளை செய்து வந்தனர். இந்த வழி சாலை பணி 100 விழுக்காடு இன்னமும் முடியவில்லை. அதற்குள்ளாக, புதுச்சேரி அருகே உள்ள கெங்கராம்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சிவா பைபர் என்ற தனியார் நிறுவனம் பிப்ரவரி 24 ஆம் தேதியில் இருந்து கட்டணம் வசூல் செய்து வருகிறது. கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்கள் ஒரு முறை பயணிக்க ரூ.60, திரும்ப வருகைக்கு ரூ. 90 , மாதம் ஒன்றுக்கு ரூ. 1,985 என வணிக உபயோகம் அல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு மாதம் ரூ.340 என்ற தொகையாக சுங்க கட்டணம் வசூலிக்கிறார்கள். இதில் கார்,வேன், ஜீப் ஆகிய சிறிய வாகனங்கள் ஒரு முறை சென்றால் ரூ.60, திரும்பவும் வந்தால் கூடுதலாக ரூ.30 தொகை சேர்த்து மொத்தம் ரூ.90 வசூலிக்கிறார்கள். இது போல் வாகன கட்டணம் வசூல் செய்யும் சென்னை, திருச்சி தெசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் 24 மணி நேரம் வரை வாகனங்கள் அதே கட்டணத்தில் திரும்பி வந்து செல்ல அனுமதி உள்ளது. இதற்கு மாறாக கெங்கராம்பாளையம் சுங்கச்சாவடியில் மட்டும் 24 மணி நேரத்திற்குள் திரும்பி வந்தால் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அநியாயம் உள்ளதாக வாகன ஓட்டுனர்கள் குமுறுகிறார்கள். மினி கேரியர் ஓட்டுநர்கள் பாதிப்பு புதுச்சேரி மதகடிப்பட்டில் இருந்து சுங்கச்சாவடியை கடந்து அருகில் உள்ள வளவனூர் பகுதிக்கு நாள் ஒன்றுக்கு ஐந்து முறை சென்றால் ரூ.450 கட்டணம் கட்ட வேண்டிய அவலம் உள்ளது என்று மினி கேரியர் சிஐடியு சங்க ஓட்டுநர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோ மீட்டர் சென்று வரும் உள்ளூர் வாகனங்களுக்கு இலவச கட்டணம் என்று சலுகை உள்ளது. அது எங்களுக்கு பொருந்தாது என்று கெங்கராம்பாளையம் சுங்கச்சாவடி பொறுப்பாளர்கள் தெரிவிப்பதாக சிஐடியு புதுச்சேரி மாநில தனியார் வாகன ஓட்டுநர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் எம்.பி.மதிவாணன் குற்றஞ்சாட்டினார். புதுச்சேரியில் வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டது. வங்கிகள் மூலம் கடன் பெற்று மினி வேன் வாகனங்களை, வாங்கி ஓட்டுநர்கள் தொழில் செய்து வருகின்றனர். வாகனங்களின் உதிரி பாகங்கள் விலை ஏற்றம்,இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு இவைகளுக்கு மத்தியில் பல்வேறு சிரமங்கள் உடன் மினிவேன் கேரியர்களை ஓட்டுநர்கள் இயக்கி வருகின்றனர். சுங்கச்சாவடியின் அடாவடி கட்டணம் தற்போது பன் மடங்கு உள்ளதால் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அநியாய கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்த நிலையில், சுங்கச்சாவடி அதிகாரி கிரிதரன் தலைமையில் சிஐடியு நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் தட்சாணமுர்த்தி,மணிபாலன்,சஞ்சிவி மற்றும் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். அப்போது, நாள் ஒன்றுக்கு சுங்கக் கட்டணம் ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் வசூல் செய்து, தனியார் சுங்கச்சாவடி நிறுவனத்திற்கு கொடுத்தாக வேண்டும் என்ற அதிர்ச்சி தகவல் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சிஐடியு சாலை போக்குவரத்து சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியால் சிஐடியு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த கூட்டத்தில்,உள்ளூர் மினி கேரியர் வாகனங்களுக்கு மாதக் கட்டணம் ரூ.340 லிருந்து ரூ.150 ஆக நிர்ணயம் செய்தனர்.இந்த கட்டணம் வாகனங்களின் ஆவணத்தின் படி வசூலிக்கப்படும் என்று உறுதியளித்தனர். 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு இலவச பாஸ் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் ரோடுகளை சரி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை சுங்கச்சாவடி பொறுப்பாளர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம். மீறும் பட்சத்தில் சுங்கச்சாவடியை மீண்டும் முற்றுகையிடுவோம் என்று சிஐடியு தலைவர் தெரிவித்தார்.