tamilnadu

img

சென்னை தினம்: ஆளுநர் ரவி வெளியிட்ட வாழ்த்தில் சர்ச்சை!

சென்னை தினத்தை, மெட்ராஸ் தினம் எனக் குறிப்பிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் தென் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி 'மெட்ராஸ் பிரசிடென்சி' என்றே அழைக்கப்பட்டது. கடந்த 1968-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆட்சிக் காலத்தில் 'தமிழ்நாடு' என மாற்றப்பட்டது. இதன் பிறகு ஏறக்குறைய 28 ஆண்டுகள் கழித்து 1996-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, தமிழ்நாட்டின் தலைநகர் மெட்ராஸை 'சென்னை’ எனப் பெயர் மாற்றி அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில், சென்னை தினத்தை, மெட்ராஸ் தினம் என குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், “மெட்ராஸ் தினத்தில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்; வியப்பூட்டும் கலாச்சார பன்முகத்தன்மை, ஆழமாக வேரூன்றிய ஆன்மிகம், அறிவார்ந்த வலிமை ஆகியவற்றின் இந்த தொடர்ச்சியை அதே ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேலும் முன்னெடுத்துக் கொண்டாடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.