tamilnadu

நலவாரிய பயன்கள் ஊரகப் பத்திரிகையாளர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுத்திடுக! முதலமைச்சருக்கு டியூஜெ வேண்டுகோள்

சென்னை, டிச. 10 - பத்திரிகையாளர் நல வாரியப்பயன்கள், ஊரக பத்திரிகையாளர்களுக்கு கிடைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு யூனியன் ஆப்  ஜெர்னலிஸ்ட்ஸ் சங்கம் (T.U.J.) வேண்டுகோள் விடுத்துள்ளது.  

இதுகுறித்து சங்கத்தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களில் 65 சதவீதத்தில் இருந்து 70 சதவீதம் இருக்கும் தாலுகா, ஒன்றிய அளவில், வெயில், மழை, புயல் பெரும் வெள்ள காலத்தில், உயிரை துச்சம் என நினைத்து பணிபுரியும் பத்திரிகையாளர்கள்,ஊடகவியலாளர்களிடம், அந்தந்த நிர்வாகமும், மாவட்ட பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களை கசக்கி பிழிந்து வேலையை வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு அடையாள அட்டை கூட கொடுக்காமல், எந்த உரிமையும் கொடுக்காமல், மிகக்குறைந்த ஊதியம் கூட கொடுக்காமல், அவர்கள் எழுதும் செய்திகளுக்கு பத்தி, சென்டிமீட்டர் என அளந்து, சம்பளம் கொடுக்கும்கேவலமான செயலை, பெரிய பத்திரிகை நிறுவனங்கள் செய்துவரும் அவலநிலை இன்றும் இருந்து வருகிறது. பத்திரிகையாளர்களுக்கு அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்.

பத்திரிகையாளர்கள் நலவாரிய குளறுபடிகளை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, களைந்து ஜனநாயகத்தின் 4வது, பத்திரிகை, ஊடகவியலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.