முன்னாள் எம்.பி மஸ்தான் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் 5 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான மருத்துவர் மஸ்தான் தஸ்தகீர் (66) சென்னையிலிருந்து காரில் கூடுவாஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், நெஞ்சு வலி, வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கூடுவாஞ்சேரியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பிறகு, பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடற்கூராய்வுகள் முடிந்ததும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து மஸ்தானின் உடல் திருவல்லிக் கேணி பாலாஜி நகரிலுள்ள அவரது வீட்டுக்கு செல்லப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். மஸ்தானின் மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐடிசி சோழா ஓட்டலில் வியாழனன்று (டிச.22) மாலை நடைபெறவிருந்த நிலையில் அவரது மரணம் பெரும் சந்தேகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் மஸ்தான் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.