tamilnadu

img

மெல்லிசைக் கலைஞர்களுக்கு தனி நலவாரியம்... தமுஎகச மாநாட்டில் அமைச்சர் பாண்டியராஜன் உறுதி

சென்னை:
நிகழ்த்துக் கலைஞர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் மெல்லிசைக் கலைஞர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்றும் தமுஎகச மாநாட்டில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் உறுதியளித்தார்.கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்வாதாரம் முடங்கிப் போய் நிர்க்கதியான நிலையில் உள்ள  தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைஞர்களின் நலவாழ்வுக்கான கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து நிகழ்த்துக்கலை கலைஞர்களின் வாழ்வாதாரக் கோரிக்கை மாநாடு இணையவழியாக நடைபெற்றது.

இம்மாநாட்டிற்கு சங்கத்தின் கௌரவத்தலைவர் ச.தமிழ்ச்செல் வன், பொறுப்புத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், துணைத்தலைவர் திரைக்கலைஞர் ரோஹிணி ஆகியோர் தலைமை வகித்து உரையாற்றினர்.மாநாட்டின் நோக்கங்களை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் பிரளயன் விளக்கினார். 12 கோரிக்கைகள் அடங்கிய மாநாட்டு அறிக்கையை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா முன்வைத்தார்.எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பேசுகையில், "2007ஆம் ஆண்டில் சென்னையில் நாட்டுப்புறக் கலைஞர்களின் கோரிக்கை சங்கமத்தை நடத்தினோம். அப்போதைய முதல்வர் கலைஞர் நம்மை அழைத்துப் பேசியதுடன், அன் றைக்கே நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டார்" என்றார்.

செவ்வியல் கலைகளுக்கு இருப் பதைப் போல கல்விக்கூடங்களில் இக்கலைகளை பயிற்றுவிக்க 2007ஆம் ஆண்டிலேயே வைத்த கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை என்றும் பேருந்துகளில் இக் கலைஞர்களின் இசைக்கருவிகளை ஏற்ற மறுக்கும் நிலை நீடிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசுகையில், கலைஞர்கள் வாழ்ந்தால்தான் கலைகள் வாழும். தமிழ்நாட்டின் அனைத்து நிகழ்த்துக்கலை கலைஞர்களின் உள்ளங்களில் கிடக்கும் கோரிக்கைகள் நியாயமானவை.  மாவட்டந் தோறும் ஆண்டுக்கொருமுறை நிகழ்த்துக்கலைகளுக்கான வாரவிழாவை அரசு நடத்தவேண்டும், கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு காவல்துறை நேரக்கட்டுப்பாடு விதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி பேசுகையில், நாட்டுப்புறக் கலைகளை நகர்சார் மக்களிடம் கொண்டு சேர்க்க உதவிய சென்னை சங்கமம் போன்ற நிகழ்வுகளை தொடர்வது அவசியம். இம்மாநாட்டின் கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கு மக்களவை உறுப்பினர் என்கின்ற முறையிலும் திமுகவின் சார்பிலும் உறுதி அளிக்கிறேன் என்றார்.மாநாட்டின் துவக்கத்திலும் நிறைவிலுமாக இருமுறை தமிழ்மொழி வளர்ச்சித்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் கலந்துகொண்டு பேசியதாவது:

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ள நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தமிழக அரசின் சார்பில் முடிந்தவரை உதவிகள் வழங்கப் பட்டன. நலவாரியத்திற்கான நலத்திட் டங்கள் மும்மடங்காக உயர்த்தப் பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் நாட்டுப்புறக் கலைஞர்கள் இருப்பார்கள் என்று தெரிகிறது. இதுவரை 50 ஆயிரம் பேர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிந்துள்ளனர்.60 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை வலுப்படுத்தியுள்ளோம். இதுவரை 6000 கலைஞர்களை அத்திட்டத்தின் கீழ் கொண்டுவந்துள்ளோம். மீதமுள்ள 4000 பேரை அடையாளம் காணும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .தமிழகத்தில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான அடையாள அட்டையை ஒரு லட்சத்து எழுபதாயிரம் பேர் வைத்துள்ளனர். ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரை நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு இலக்கு நிர்ணயித்து சேர்க்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமுஎகச போன்ற அமைப்புகள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.

இசைக்கருவிகள் வாங்குவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பேர் எனத் தேர்வு செய்து தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும் தீவிரப்படுத்த உள்ளோம். வெளிநாடுகளில் சென்று நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது. யாரெல்லாம் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றிய தகவல் அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை நாட்டுப்புற கலைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தென்னக பண்பாட்டு மையத்தால் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை இரு மடங்காக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. இம்மையத்தின் பணிகளும் முறைப்படுத்தி விரிவுபடுத்தப்படும்.மெல்லிசைக் கலைஞர்களுக்கென தனியாக ஒரு வாரியம் அமைப்பதென கொள்கையளவில் முடிவெடுக்கப் பட்டுள்ளது. முதல்வரும் ஒப்புக் கொண்டுள்ளார். ஓரிரு வாரங்களில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

நாட்டுப்புறக் கலைஞர்கள் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களை ஒன்றிணைக்க நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் சார்பில் அரசு முழு முயற்சியை மேற்கொள்ளும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மேனாள் தலைவரும் திரைக்கலைஞருமான நாசர், கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் முனைவர் இரா.காமராசு, திரைக் கலைஞர் ரோஹிணி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கலைப்புலத்தின் தலைவர் வெ.கோவிந்தசாமி, தமிழ்நாடு கட்டைக் கூத்து கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் பெருங்கட்டூர் ராஜகோபால், தெருக்கூத்து கலைஞர் கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன், சங்கத்தின் பொறுப்பு தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விடியல் குமரேசன் நன்றி கூறினார்.