முதலமைச்சர் அறிவிப்பு ஏமாற்றமே இடைநிலை ஆசிரியர் சங்கம் கருத்து
சென்னை, ஏப்.29 - அரசு ஊழியர்களுக்கு சலுகை வழங்கி முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் ஏமாற்றமளிப்பதாக தமிழ்நாடு இடை நிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சங்கர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெயிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத்தில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தும் ‘அரசு திரும்ப பெறக்கூடிய தொகையை சலுகையாக அறிவித்துள்ளார்’ இது மக்கள் மத்தியில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சலுகை செய்வது போல காட்சி அளித்து ஏமாற்றத்தை உருவாக்குகிறது. இவ் அறிவிப்பை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, தேர்தல் வாக்குறுதிப்படி கடந்த கால ஆட்சியில் பறிக்கப்பட்ட 21 மாத ஊதிய நிலுவைத் தொகையையும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டர் நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியதிட்டம், காலிபணியிடம் நிரப்புவது குறித்த அறிவிப்பு வரும் என்று எண்ணிய நிலையில் ஏமாற்றமே மிச்சம். நடைமுறை அறிவிப்பும் ஏதும் இல்லை என்பது ஏமாற்றமே! மகப்பேறு விடுப்பை ஒரு வருடமாக நீட்டிருப்பது பாராட்டுக்குரியது. மகப்பேறு காலத்தில் செல்லும் ஆசிரியருக்கு பதிலாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களை அந்த இடத்தில் நியமனம் செய்து மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு சென்னை, ஏப்.29- காஷ்மீரில் உள்ள பஹல்காம் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் செவ்வாயன்று ரயில்வே பாதுகாப்பு படையினர் அனைத்து நுழைவுப் பகுதிகளிலும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பயணிகள் எடுத்து வருகின்ற உடமைகளை ஸ்கேனர் கருவி மூலம் தீவிரமாக பரிசோதனை செய்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் மூலம் ரயில் நிலையத்தின் அனைத்து பிளாட்பாரங்கள், பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ரயில் நிலையத்திற்கு வருகின்ற அனைத்து பயணிகளின் உடமைகளும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது. பயணிகள் காத்திருக்கும் அறைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது. போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்த இளைஞர் கைது சென்னை,ஏப்.29- கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை ஈடுபட்ட இளைஞர் கைது நாக்பூரில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து திருவொற்றியூர் பகுதியில் விற்பனையில் ஈடுபடுவதாக தனிப்பட்டை காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது தகவலின் பேரில் தனிப்படை காவல் துறையினர் திருவொற்றியூர் வன்னியர் தெருவில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டு இருந்த இளைஞரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த பாலாஜி (23) என்பது தெரியவந்தது மேலும் நாக்பூரில் போதை மாத்திரை 3 ரூபாய்க்கு வாங்கி, சென்னையில் 300 ரூபாய்க்கு விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரிடம் இருந்த 500 போதை மாத்திரைகள் மற்றும் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சிதம்பரம் அருகே குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்கள் நூதன போராட்டம் சிதம்பரம், ஏப்.29- குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கிராம மக்கள் காலி குடங்களுடன் கற்பூரம் ஏற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் அருகே வையூர் கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி இருந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக மோட்டார் பழுது காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்து கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிதம்பரம் – நந்திமங்கலம் செல்லும் சாலையில் காலிக் குடங்களை சாலையில் வைத்து குடிநீர் வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். பின்னர் பொது இடத்தில் உள்ள கோயிலில் சூடம் ஏற்றி வினோத வழிபாடு செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராகிமை கேட்டபோது மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் அருகே உள்ள போரில் பைப்புகள் பழுதடைந்துள்ளது. புதிய போர்வெல் போடுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாக கூறினார். தூக்குதண்டனை குற்றவாளி விடுதலை சென்னை, ஏப்.29- சென்னை குன்றத்தூர் அருகே தாயை கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தஷ்வந்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தந்தை சேகர் பிறழ் சாட்சியாக மாறியதால் மகன் தஷ்வந்தை நீதிமன்றம் விடுதலை செய்தது.