tamilnadu

img

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் புகுந்த மழை நீரால் ரூ.500 கோடி இழப்பு

அம்பத்தூர் தொழிற்பேட்டையில்  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மழைநீர் புகுந்தது. இதையடுத்து இயந்திரங்கள், மூலப்பொருட்கள், உற்பத்தி பொருட்கள் உள்ளிட்டவைகள் தண்ணீரில் மூழ்கி 500 கோடி ரூபாய்க்கு மேல் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை 1,400 ஏக்கர்  பரப்பளவில் அமைந்துள்ளது. அங்கு மட்டுமல்லா மல் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், முகப்பேர், அத்திப்பட்டு, மண்ணூர்பேட்டை, மங்களபுரம், பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்த்து சுமார் 5 ஆயிரம் சிறிய, பெரிய நிறுவனங்கள் உள்ளன. மேலும், இங்கு 100க்கும் மேற்பட்ட ஏற்றுமதி ஆடை, சாப்ட்வேர், கால் சென்டர் நிறுவனங்களும் உள்ளன. இங்கு சென்னை, புறநகர், திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினசரி சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர்.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் திங்களன்று (டிச. 4) கனமழை தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக ஆவடி பகுதியிலுள்ள சேக்காடு ஏரி, கவரபாளையம் ஏரி, விளிஞ்சியம்பாக்கம் ஏரி,  பருத்திப்பட்டு ஏரி, அரபாத் ஏரி, அயப்பாக்கம் ஏரி,  அம்பத்தூர் ஏரி ஆகியவை நிறைந்து உபரி நீர் வெளியேறியது. இந்த நீர் அம்பத்தூர் வழியாக கொரட்டூர் ஏரிக்கு செல்லும் உபரி நீர் கால்வாயில்  பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, கால்வாயில் உபரி நீர் செல்ல முடியாமல் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள பால் பண்ணை சாலை, சிடிஎச் சாலை, அம்பத்தூர் 3ஆவது பிரதான சாலை, 2ஆவது பிரதான சாலை, பட்டரைவாக்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலை உள்ளிட்ட சாலைகளில் ஆறாக ஓடியது.

இதனால் அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் 3 அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்குள்ள இயந்திரங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமானது. மேலும், உற்பத்தி செய்த பொருட்கள், மூலப் பொருட்கள் உள்ளிட்டவைகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

மேலும் தொழிற்சாலைகளில் இருந்த ரசாயனப் பொருட்கள், எண்ணெய் மற்றும் கழிவு நீரும் மழை நீருடன் கலந்து சாலைகளில் தேங்கி நிற்பதால் தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.

மேலும் இந்த தொழிற்சாலைகளை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான லாரி உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தள்ளுவண்டி ஓட்டுபவர்கள், சிறு கடை வணிகர்கள், உணவகங்கள் என மறைமுக மாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர்கள் கூறுகையில், அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் புயல் மற்றும் மழையால் தண்ணீர் புகுந்து மிக பெரிய சேதத்தை ஏற்படுத்தி யுள்ளது. எப்போது மழை பெய்தாலும் இங்குள்ள  சிறு குறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படு கின்றன. தற்போது மிக்ஜம் புயல் மழையால் அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர், பட்டரை வாக்கம், அத்திப்பட்டு, கல்யாணி எஸ்டேட் மற்றும்  சுற்றியுள்ள பகுதியில் உள்ள 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட நிறுவனங்களில் மழை நீர் புகுந்ததால் இயந்திரங்கள், மூலப்பொருட்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவை சேதமடைந்துள் ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.500 கோடி வரை இருக்கும்.

மேலும் இந்த இழப்பு இல்லாமல் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற, இயந்திரங்களை சீரமைக்க, தொழிற்சாலையை தூய்மைப்படுத்த, சேதமடைந்த மின் சாதனங்களை சீரமைக்க என ஒரு பெரும் தொகையை செலவிட வேண்டும். அதன் பிறகுதான் உற்பத்தியை தொடங்க முடியும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டை அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகும். ஆனால் உரிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாததால் எப்போது மழை பெய்தாலும் இங்குள்ள சிறு குறு நிறு வனங்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும். கடந்த வர்தா புயலின் போது இங்குள்ள சிறு குறு நிறுவனங்கள் முதல் பெரும் நிறுவனங்களுக்கு கடுமையான பொருளாதார இழப்பு ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டு வருவதற்குள் கொரோனா பொது முடக்கத்தால் சிறு குறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதனால் ஏறக்குறைய 40 விழுக்காடு சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது பெய்த மழையால் மீண்டும் நிறுவனங்கள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது. உட்புறச் சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. அதற்கு காரணம் முழுமையான வடிகால் வசதி இல்லாததே. இருக்கும் வடிகால் வாய்களுக்கும் பல இடங்களில் முறையான இணைப்பு இல்லாமல் உள்ளது. பல இடங்களில் அடைப்பு உள்ளது. சாலைகள் அமைக்கும் போதும் முறையாக மழைநீர் வடிகால் வாய்களுக்கு செல்லும் வகையில் அமைப்பதில்லை. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற நிலையே 50 ஆண்டு பழமை வாய்ந்த அம்பத்தூர் தொழிற்பேட்டையின் நிலையாக உள்ளது.

எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்பு நிதி ஒதுக்கி அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கைக்கேற்ப அகல மான, ஆழமான மழைநீர் வடிகால்வாய்களை அமைக்க வேண்டும். சாலை உள்ளிட்ட உட்கட்ட மைப்புகளை மேம்படுத்த வேண்டும். நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் சிறு குறு நிறுவனங்கள் மீண்டு வர அரசு உதவ வேண்டும். இருக்கும் தொழிற் சாலைகள், தொழில் நசிந்து கொண்டிருக்கும் போது அதை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கா மல் எத்தனை முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினா லும் அதனால் எந்த பயனும் இல்லை என்பதை அரசு உணர வேண்டும்.