"ஒரு நாடு ஒரு தேர்தல்" திட்டம் ஒற்றை ஆட்சி அதிகாரத்திற்கு வழிவகுக்கும்; அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு, தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் திணிக்கப்படும் இந்த திட்டத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
"கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதும், நடைமுறைக்கு சாத்தியமில்லாத "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தை இந்தியா எதிர்க்கும். ஏனெனில், இத்திட்டம் ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் அழித்துவிட்டு, நாட்டை ஒற்றை ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு போய் தள்ளிவிடும்.
அதிபர் தேர்தல் நடத்துவது போல பொதுத்தேர்தல்களை நடத்தும் உள்நோக்கத்துடன் இத்திட்டத்தை பாஜக அரசு திணிக்கிறது. இது நமது அரசிலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
இந்த மசோதா, நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டால், சட்ட ரீதியாக இருக்கும் வாய்ப்புகளை நீக்கி விடும். நம்முடைய அரசியலமைப்பை சர்வாதிகார தன்மையின் கீழ் கொண்டு போய் சேர்த்து விடும்.
மாநிலத் தேர்தல்கள் அவற்றின் அரசியல் முக்கியத்துவத்தை இழக்கும். மாநிலங்கள் உரிமையை இழந்து பிராந்திய உணர்வுகள் மற்றும் பன்முகத்தன்மை அழிக்கப்படும். தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் திணிக்கப்படும் பாஜகவின் முயற்சியை எதிர்க்க வேண்டும்
அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு, தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் திணிக்கப்படும் இந்த “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை எதிர்த்துப் போராட வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.