tamilnadu

img

எஃப்.ஐ.ஆர் கசிவுக்கு காரணம் தொழில்நுட்ப கோளாறு - தேசிய தகவலியல் மையம்

ஐபிசி-இல் இருந்து பி.என்.எஸ் சட்டத்திற்கு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக எஃப்.ஐ.ஆர் கசிந்திருக்கலாம் என தேசிய தகவலியல் மையம் (NIC) தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், 4 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதை தொடர்ந்து இச்சம்பவத்தில் ஞானசேகரன் (37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்டு ஞானசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை .தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர் கசிந்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தன. 
சமூக வலைதளங்களில் இருந்து எஃப்.ஐ.ஆர்-ஐ நீக்கிய காவல்துறை, எஃப்.ஐ.ஆர் நகலைப் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்திருந்தது. மேலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக எஃப்.ஐ.ஆர் கசிந்ததாகவு, இதற்கு என்.ஐ.சி தான் பொறுப்பு என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஐபிசி-இல் இருந்து பி.என்.எஸ் சட்டத்திற்கு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக எஃப்.ஐ.ஆர் கசிந்திருக்கலாம் என தேசிய தகவலியல் மையம் (NIC) விளக்கமளித்துள்ளது.