அரசுப் பள்ளிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்
வேலூர், ஜூன் 14- அரக்கோணம் அருகே தலைமை ஆசிரியர் பாடங்களை சரியாக நடத்தவில்லை எனக் கூறி பொதுமக்கள் அரசுப்பள்ளிக்கு பூட்டு போட்டனர். வேலூர் மாவட்டம் நெமிலி தாலுகா அரும்பாக்கம் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அரும்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்ற னர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் உள்பட 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர். தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் பள்ளிக்கு தினசரி வருவதில்லை என்றும், பாடங்களை சரியாக நடத்துவதில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளிக்கு வந்தனர். அவர்கள் தலைமை ஆசிரியரிடம் பள்ளிக்குச் சரியாக வராதது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாணவர்கள் மற்றும், தலைமை ஆசிரியரை பள்ளியில் இருந்து வெளியேற்றி விட்டு பள்ளிக்கு பூட்டு போட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி வட்டார கல்வித் துறை கண்காணிப்பாளர் பசுபதி கிராம மக்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார். அப்போது பொதுமக்கள் தலைமை ஆசிரியரை மாற்றும்படி கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் மருத்துவ விடுப்பில் சென்றார். அதனைத்தொடர்ந்து சித்தேரி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்விஜயகுமார், அரும்பாக்கம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வீடு கட்ட, தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி, ஜூன் 14- விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வீடு கட்டவும், தொழில் துவங்கவும் விண்ணப்பம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 50 பழங்குடியின மக்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டித் தரப்பட வுள்ளன. மேலும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பத்து பேரைக் கொண்ட குழுக்கள் அமைத்து அதில் ஐந்து குழுக்களைக் கொண்ட ஒரு குழுவிற்கு 10 லட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கி தொழில் துவங்கிட ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பயன்பெற தகுதியான பழங்குடியின மக்கள் திட்ட அலுவலர், பழங்குடியினர் நலம், வட்டாட்சி யர் அலுவலக வளாகம் கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு பயனாளிகளின் புகைப்படம், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வீடு கட்டுவதாக இருந்தால் அந்த நிலத்திற்கான பத்திரம் அல்லது பட்டா போன்ற விவரங்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரரின் தொலைபேசி அல்லது செல்போன் எண், சரியான குடியிருப்பு முகவரியைக் குறிப்பிட வேண்டும்.
குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
வேலூர், ஜூன் 14- ஆற்காடு அடுத்த சின்னதக்கை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் அரக்கோணத்தை சேர்ந்த வாலிபருக்கும் திருப்பதியில் வைத்து திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு தாசில்தார் வர்சலா, கிராமநிர்வாக அலுவலர் மஞ்சுநாத், வருவாய் ஆய்வாளர் சத்யா மற்றும் திமிரி சமூக ஆர்வலர் தமிழரசன் தலைமையில் 3 குழுவினர் மற்றும் காவல்துறையினர் , சம்பவ இடத்திற்கு சென்று, பெண்ணுக்கு திருமண வயது 18. அதற்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமணம் நடத்தினால் சட்டபடி குற்றம் என பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து திருமணத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.