சுற்றுலா கப்பல் சேவை தமிழகத்தில் தொடங்கியது
சென்னை,ஏப். 22- பல்வேறு சொகுசுக் கப்பல்களின் உல்லாச சுற்றுலா சேவைகளை ஒருங்கிணைத்து சந்தைப்படுத்திவரும் இந்தியாவின் ஒரே நிறுவனமான க்ரூஸ்பே, சென்னையைச் சேர்ந்த அடையார் டிராவல் பீரோ நிறுவனத்துடன் இணைந்து 1500-க்கும் மேற்பட்ட சுற்றுலா திட்டங்களை தமிழகத்தினருக்கு வழங்கவுள்ளது.வரலாற்று ரீதியாக, மலேசியா மற்றும் சிங்கப்பூர் தமிழகத்துடன் நெருங்கிய வர்த்தக தொடர்பு கொண்ட நாடுகளாகும். எனவே தான், இங்கிருந்து அதிகமானோர் அந்த நாடுகளுக்கு பயணமாகி வருகின்றனர். அனைவருக்கும்பொருந்தக்கூடிய வகையில் விமான கட்டணம், நேரடி விமான சேவை இருப்பதால் விடுமுறை காலத்தை கழிக்க பயணிகள் அதிகளவில் அங்கு செல்கின்றனர் என்கிறார் க்ரூஸ்பே நிறுவனத்தின் இயக்குநர் நிகில் தாகூர்தாஸ். தற்போதைய சொகுசுகப்பல் சேவையால் சிங்கப்பூருக்கு கப்பலில் சென்று விடுமுறை காலத்தை கொண்டாடுவது சாத்தியமாகியுள்ளது. இதைத் தவிர, பாலி , புக்கெட், லங்காவி மற்றும் வியட்நாமிற்கும் பயணிகள் உல்லாசபயணம் மேற்கொள்ள வழிகிடைத்துள்ளது என்று அடையார்டிராவல் பீரோ நிறுவனத்தின் இயக்குநர் பீட்டர் ஜேசுதாஸ் கூறினார்.
வியாபாரி வெட்டிக் கொலை
தூத்துக்குடி, ஏப்.23-தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு, பணிக்கர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் மகன் பூல்பாண்டி (28) கருப்பட்டி வியாபாரி. அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் கோட்டைசாமி மகன் மணிகண்டன், முருகன் மகன் கிருஷ்ணமூர்த்தி (17). இவர்கள் மூவரும் ஞாயிறன்ற மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கிருஷ்ணமூர்த்தியும், மணிகண்டனும் சேர்ந்து பூல்பாண்டியை அரிவாளால் வெட்டியுள்ளனர்.இதனை தடுக்க முயன்ற அப்பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் அருவாள் வெட்டு விழுந்தது. இதில், பூல்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமசாமி படுகாயத்துடன் நெல்லை ஐக்கிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தப்பியோடிய மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.